அன்பின்றி இறைவனை உணர முடியாத- இன்று அன்னை ஸ்ரீ சாரதா தேவி பிறந்த தினம்..

Published:

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி பிறந்த தினம் இன்று டிச22 உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உன் குறைகளையே பார். உலகத்தி லுள்ள எல்லோரையும் உனதாக்கிக் கொள். யாருமே அன்னியர் அல்லர். உலகம் முழுவதும் உனது உறவே!” -மரணப் படுக்கையில் இருந்தபோது கடைசியாய் அவர் உலகிற்கு அளித்த வார்த்தைகள் அவை. அவரது வாழ்க்கை முழு வதுமே ஆன்மிகப் பாதையில் தான் இருந்தது. ஆனால், அதைப் பார்த்த சாதாரண மக்களுக்கு அவரது வாழ்க்கை வினோதமாகப்பட்டது. அவர் அன்னை சாரதா தேவி.

இந்தியாவின் மனோன்னதமான மகா புருஷர்களின் பரம்பரையில் வந்த மகான்களில் ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்கியமானவர். அதி அற்புதங்களால் மக்களை கவர்ந்த மகான்களுக்கு மத்தியில் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த யதார்த்த வடிவங்களின் இறைத்தத்துவத்தை விளக்கிக் காட்டியவர் ராமகிருஷ்ணர். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அன்னை சாரதா தேவி. ராமகிருஷ்ணரின் மனைவியாக மட்டுமல்லாமல் அவரது முதல் சீடராகவும் இருந்தார். பின்னால் வந்து சேர்ந்த சீடர்களுக்கு எல்லாம் நல்ல தாயாகவும் விளங்கினார்.
மேற்கு வங்காளத்தில் வயலும் வாய்க்காலுமாகப் பசுமை படர்ந்திருந்த அழகிய கிராமம் ஜெயராம்பாடி. அங்கு வாழ்ந்த ராமச்சந்திர முகர்ஜி – சியாம சுந்தரி தம்பதியரின் மகள் சாரதா தேவி. முதலில் அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தாகூர் மணி என்பது, பின்னாளில் சாரதா மணியாக மாற்றப்பட்டது. ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் கொண்டபோது அவரே சாரதா தேவியாக அழைக்கப்பட்டார்.
காமார்புகூரில் பிறந்து தட்சினேணவரத்தில் வாழ்ந்த பரம ஹம்சர் ராமகிருஷ்ணரின் இறைநாட்டம் பரவலாக வெளிப்பட்ட காலத்தில் அவரது நடவடிக்கைகளைக் கண்டவர்கள் அவரது மகிமையை உணர்ந்தாரில்லை. அவரது சித்த புருஷ நிலையைப் பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி வருத்தமுற்றனர். அதனால் அவரது தாயும், சகோதரரும் அவருக்குத் திருமணம் செய்வதால் பைத்தியம் தெளியும் என்று கருதினர். விளைவு அவருக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால், ஒரு பொருத்தமான பெண் அமையாமல் தள்ளித் தள்ளிப் போனது. இதனால் அவர்கள் வருத்தமுற்றனர்.
ஆனாலும், 1859 இல் ராமகிருஷ்ணர் – சாரதாதேவி திருமணம் நடந்தது. மணமகனுக்கு வயது 23 ; ஆனால், சாரதாவுக்கோ வயது 5. பருவம் அடையாத சாரதா திருமணத்திற்குப் பின் தாய் வீடு திரும்பினாள். ராமகிருஷ்ணர், தட்சிணேஸ்வரத்தில் ஆன்மிக சோதனைகளில் ஈடுபட்டு வெவ்வேறு வழிகளில் இறைவனை அடையும் முயற்சியில் இருந்தார். சாரதாவைப் பார்ப்பவர்கள் ‘ஐயோ பாவம்! இவளுக்கு அந்தப் பைத்தியத்தைத் திருமணம் செய்து வைத்து விட்டார்களே’ என்று பேசுவார்கள். இதைக் கேட்டு வருத்தமுற்ற சாரதா கடைசியாகத் தானே தட்சிணேஸ்வரம் சென்று ராமகிருஷ்ணரைப் பார்க்க முடிவு செய்தார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

1872 இல் மார்ச் மாதம் சாரதா தனது தந்தை மற்றும் சில உறவினர்களுடன் ராமகிருஷ்ணரைப் பார்க்கப் புறப்பட்டு விட்டார். ஜெயராம்பாடிக்கும், தட்சிணேஸ்வரத்திற்கும் அறுபது மைல் தூரம். 3 நாட்கள் தொடர்ந்து நடந்தால் போய்ச் சேர முடியும். ஆரம்பத்தில் உற்சாகமாக நடந்த சாரதா பாதியில் கடும் காய்ச்சலுக்கு ஆளானார். ஓர் சத்திரத்தில் தங்கி, பின் குணமடைந்ததும் தட்சிணேஸ்வரம் போய்ச் சேர்ந்தார். அங்கு, ராமகிருஷ்ணர் மனைவியை அன்போடு வரவேற்றார். கிராமத்துப் பெண்கள் சொன்னது போல் அவர் ஒன்றும் பைத்தியமாக இல்லை என்பது பெரும் ஆறுதலாக இருந்தது. சாரதா அவருடனே இருந்து சேவை செய்து வாழ விரும்பினார்.

அவர்கள் வாழ்க்கை சாதாரண தம்பதியினரின் வாழ்க்கையாக இல்லாமல் ஒரு மேலான நிலையிலிருந்தது. சாரதாவே, ராமகிருஷ்ணரிடம் சொன்னார். ” நான் உங்களை உலகியல் வாழ்க்கைக்குள் இழுக்க வரவில்லை. உங்கள் ஆன்மிக வாழ்க்கையில் உதவி செய்யவே வந்திருக்கிறேன்” என்று. ராமகிருஷ்ணரும் சாரதாவை, ”உலக நாயகி யான அம்பிகையாகவே கருதுகிறேன்” என்றார். அதற்கு ஏற்றாற்போல் ஒரு அமாவாசை இரவில் ராமகிருஷ்ணர் காளி பூஜைக்கு ஏற்பாடு செய்தார். ஓர் ஆசனத்தை போட்டு பூஜைக்குத் தேவையானதைக் கொண்டு வந்தார். கடைசியாய் சாரதாவை அழைத்து வந்து ஆசனத்தில் உட்கார வைத்துப் பூஜை செய்யத் தொடங்கி விட்டார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பூஜை தொடங்கியதும் சாரதா வெளி உணர்வை இழந்தார். பூஜை முடிந்து மெளனம் கலைந்தபோது, அவர் தனக்குள் ஒரு தெய்வீக ஆற்றல் புகுந்திருப்பதை உணர்ந்தார். ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணாகக் கணவன் வீடு வந்த அவர், பின்னர் அன்னை சாரதாதேவியாக மாறிப் போனார். நகபத் என்றும் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சிறு அறையில் அவர் வாழ்ந்தார். ராமகிருஷ்ணருக்குப் பணிவிடை செய்வதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.

ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின் சாரதை விதவைக் கோலம் பூண்டதை ராமகிருஷ்ணரே எதிர்த்தார். ஒரு தரிசனத்தின் மூலம், ”நான் இறந்து போய் விட்டேனா என்ன? ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குப் போயிருக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக நீ ஏன் விதவைக் கோலம் பூண வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணர். அதன் பின் சாரதா சுமங்கலியாகவே இருந்தார்.

என்னதான் பக்குவப்பட்ட மனதினராயிருப்பினும் ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பிறகு அவருள் சோகத்தை ஏற்படுத்தியது. அமைதிக்காக அவர் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். காசி, பிருந்தாவனம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றார். அதன்பின் கல்கத்தா திரும்பிய சாரதா தேவிக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்ட பின், கமார்புகூர் சென்று வசித்தார். ராமகிருஷ்ணரின் குடும்பச் சொத்தில் அவருக்கு சிறு குடிசைதான் கிடைத்தது. உறவினரால் கைவிடப்பட்ட நிலையில் அன்னையை யாரும் புரிந்து கொள்ளாமல் ஊரார் தூற்றவும் செய்தனர்.

பின்னர் அன்னை கல்கத்தா வந்தார். அங்கும் யாரும் அவரது மகிமை அறிந்து ஏற்கவில்லை. ராமகிருஷ்ணரை அறிந்திருந்தவர் கள் கூட அன்னையை அறிந்திருக்கவில்லை. இதனால் பல சிரமங்களுக்குப் பின் சுவாமி யோகானந்தரும், சுவாமி திரிகுணாதீதா னந்தரும் அவருக்கு உதவியாக இருந்தனர். பின்னர் பல சீடர்களும் அவருக்கு உதவியாகயிருந்தனர். 1888 இல் மீண்டும் தீர்த்த யாத்திரை சென்றார். அப்போது புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவுக்கும் சென்றார். அங்கு ஒரு துறவி மடமிருப்பதைப் பார்த்தார். அது போல் ராமகிருஷ்ணரின் சீடர்களான துறவிகளும் தலை சாய்க்க ஒரு இடம் அமைய வேண்டும் என்று எண்ணினார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

கல்கத்தாவில் கங்கைக் கரையில் பேலூரில் இடம் வாங்கி1898 இல் மடம் தொடங்கப்பட்டது. 1899 இல் அன்னை மடத்திற்கு வந்தார். தாம் எண்ணியபடி ராமகிருஷ்ணரின் சீடர்களுக்கு ஒரு மடம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். எல்லா நாட்டு மக்களையும் எல்லா ஜாதி மற்றும் இனத்தை சேர்ந்த மக்களையும் அன்னை தன் குழந்தையாகவே கருதினார். எல்லோரிடமும் அன்பு பாராட்டினார்.

விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பிய பின் பல மேலை நாட்டினர் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் அன்னையை தரிசிப்பதில் ஆர்வம் காட்டினர். அவரது தரிசனத்திற்காக இரவும் பகலும் மக்கள் கூடினர். அவரது ஓய்வு குறைந்தது. 1920 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். 1920 ஜூலை இதே 21 ஆம் தேதி அவர் உலக வாழ்வை நீத்தார். அவரது உடல் பேலூர் மடத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின் கங்கை கரையில் தகனம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அன்னைக்காக அழகிய கோயில் கட்டியுள்ளனர்.

அன்பின்றி இறைவனை உணர முடியாது. இறைவனை அடையத் தேவை உண்மையான அன்பே என்று உபதேசித்த அன்னை சாரதா தேவி என்றும் அன்புள்ளவர்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

images 21 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img