இந்த விசாலமான பிரபஞ்சத்தில் வெவ்வேறு மூலைகளில் அறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தங்கள் தவத்தினாலும், உள்ளுணர்வின் வலிமையினாலும் இறைவனைத் தேடி அறிந்து கொண்டு, நமக்கு உபதேசித்து வருவது என்ன தெரியுமா ?
இவ்வுலகிற்கு நாயகன் உளன் ! அண்ட சராசரங்கள் சரிவர இயங்குவது அவனால் மட்டுமே ! அவனை அறிவதால் மட்டுமே நீங்கள் நன்மை அடைவீர்கள்..
இந்த உபதேசத்தினை ஆதி நாள் தொடங்கி இந்நாள் வரையிலும் அறிஞர் பெருமக்கள் நமக்கு வழங்கி வருகின்றனர்.
ஜ்ஞானிகளுக்கோ நல்லுரைகளுக்கோ ஒன்றும் குறையில்லை தான்.. ஆயினும் எதையும் ஏற்றிடாத / நம்பிக்கை கொள்ளாத நாத்திகர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள் !
ஏன் இந்த முரண் ?
இக்கேள்விக்கு இறைவனுடைய முகாரவிந்தம் ( கீதையின் வாயிலாக ) நமக்கு விடை நவில்கின்றது !
இவ்வுலகத்தினர் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களோடே கூடியதாய், ஆச்சரியத்தை உண்டு பண்ணுவதால் ‘மாயா’ என்கிற சப்தத்தால் குறிக்கப்படுமதான கடக்கவரிதான ‘ப்ரக்ருதியின்’ ஜாலத்தில் அழுந்தியிருக்கின்றனர் !
( த்ரிபிர் குணமயைர் பாவைரேபிஸ் ஸர்வமிதம் ஜகத் |
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம் ||
தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா | )
சதுச்லோகியில் ஆளவந்தாரும் ‘யவநிகா மாயா ஜகந்மோஹிநீ ‘ என்று எம்பெருமானுக்கும் ஜீவனுக்கும் இடையே இந்த மாயையானது, ஒரு திரை போட்டாற்போல் உள்ளது.. அதனால் பகவானுடைய தன்மை மறைக்கப்பட்டதாக ஆகின்றது என்றருளுகின்றார்.
ஆனால் அவன் அருள் செய்தால் அவனுக்கும் நமக்கும் இடையில் இருக்கும் மாயை என்னும் அத்திரை சற்றே விலகும்.
இறையருள் என்னும் பெருஞ்செல்வம் வாய்க்கப்பெற்றவர்கள் மட்டுமே பகவத் தத்வத்தை கொஞ்சமேனும் காண / அறியப் பெறுவர்கள்.
விபவமோ அர்ச்சையோ அந்தர்யாமித்துவமோ ..அது எதுவாயினும் அவனிடத்து அன்புடைய பாக்கியவான்கள் மட்டுமே அவனை அறியக்கூடும் !
சாத்திரங்களின் திண்மையான கோட்பாடுகளும் தூய்மையான அன்பொன்றினாலன்றி வேறெந்த சாதனமும் அவனைக் காட்டாது என்றே உரைக்கின்றன.
கீதா ஶாஸ்த்ரமும் இவ்விஷயத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.
பக்த்யாஸ்த்வநந்யயா ஶக்ய அஹமேவம்விதோர்ஜுந |
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப ||
பெருமானுடைய தன்மையை உள்ளபடி அறிய, காண மற்றும் அதனுள் நுழைந்திட பக்தி மட்டுமே உதவும்.
ஏன் அப்படி என்றால்; அவன் ( இறைவன் ) அத்தன்மையன் என்பதே பதில்.. ‘ அஹமேவம்விதோர்ஜுந ‘ என்றது காண்க ..
அவன் பக்திக்கு மட்டுமே வசப்படுபவன். அபக்தர்களுக்கு துர்லபன் ( கிடைத்தற்கரியவன் )
பத்துடையடியவர்க்கெளியவன் !
– அக்காரக்கனி ஸ்ரீநிதி