கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா? நாளைய ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்கள்!
கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.
நாளை ருண விமோசன பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.
கடன் பிரச்சினை யாருக்கு
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கி விடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம். ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.
காலம் முழுவதும் சிக்கல்.
ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஆறாம்பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.
கடனாளியாகும் அமைப்பு
ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது. லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார். ஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர்.
செவ்வாயில் கடனை அடைங்க
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.
குரு இந்த இடத்தில் இருந்தா கடன் வேண்டாம்
ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை அதிகப்படுத்துவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. குரு இப்போது கேது உடன் சேர்ந்து இருக்கிறார் எச்சரிக்கை.
சனி அருள் இருந்தால் கடன் அடையும்.
எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும்.
நரசிம்மரை வணங்க கடன் தீரும்
செவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் விரைவில் அடையும். செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும். விநாயகரை வழிபட கடன் தீரும் ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.
விநாயகரை வணங்க கடன் தீரும்.
கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்கலாம். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்ற கடன் அடையும். செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.
கடன் அடைக்க ஏற்ற நாள்
செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.
செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.
இந்த காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.
செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறலாம். ஏப்ரல் மாதத்தில் 7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை, 21.4.2019 ஞாயிறு இரவு 8.28 முதல் 10.28 வரை மைத்ர முகூர்த்தம் வருகிறது.
– சித்தர்களின் குரல் ஷிவா ஷங்கர்