
சத்தியத்தை அழிப்பவையாக நான்கு அம்சங்களை பற்றி சாஸ்திரங்களில் விளக்கியுள்ளார்கள். அதேபோல் தவத்தைக் கலைப்பதற்கும் உலகில் நான்கு விஷயங்கள் உள்ளன.
உண்மையில் சத்தியமும் தவமும் ஒரே பொருளைத் தருகின்றன. சத்தியம் என்றால் வீணாகாதது என்று பொருள். தவச் சக்தியும் வீண்போகாமல் நம்மை எப்போதும் பாதுகாத்து அருளக் கூடியது.
மனிதன் முடிந்தவரை தவம் செய்து வருவானாகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும். மேலும் தவச் செல்வம் உள்ளவன் சாதிக்கக் கூடியவற்றை தவம் இல்லாதவனால் சாதிக்க இயலாது. எந்த தவமும் இல்லாமல் வேலை செய்பவனை விட தவச்சக்தி உள்ளவன் செய்யும் வேலை மிக உயர்வான பலனை அளிக்கிறது.
அதனால் எந்தப் பணியை மேற் கொண்டாலும் அதற்கு தவம் துணை இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பிரம்மதேவர் கூட முதலில் தவத்தை மேற்கொண்டு அதன் பின்தான் சிருஷ்டிப் பணியைத் தொடங்கினார். அதனால் தவச்சக்தி மிக உயர்ந்தது.
பூஜை, வழிபாடு, ஜபம், உபவாசம்…. இவ்வாறு ஏதோ ஒன்றை நியமமாகச் செய்யும்போது அதன் பலன் தவச் சக்தியாக மாறி நற்பலன்களை அளிக்கிறது. ஆனால் அதுபோன்ற நற்செயல்களைச் செய்யும் போது அவற்றிற்கு பங்கம் வராமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் செல்வம் நம்மிடம் இருக்கும் பொழுது அதனை திருடர்களிடமிருந்து எவ்வாறு காப்பாற்றிக் கொள்வோமோ அதேபோல் தவத்தைக் கூட நஷ்டமாகாமல் பாதுகாத்து வரவேண்டும்.

தவமெனும் செல்வத்தைக் கெடுப்பவை யாவை என்பதை சாஸ்திரம் கூறுகிறது.
1.திருடுதல்:- சாதகனுக்குத் திருட்டு குணம் இருந்தால் அவனுடைய தவச்செல்வம் வீணாகிவிடும். இதனை நன்கு அறிய வேண்டும். மகாபாரதத்தில் சங்கன், நிகிதன் என்ற இரு சகோதரர்களின் கதை மூலம் இதனை விளக்கியுள்ளார் வியாச மகரிஷி. இருவரும் ஆன்மீக சாதனை செய்துவரும் முனிவர்கள். அண்ணனின் தோட்டத்திலிருந்த ஒரு பழத்தைப் பறித்து சாப்பிட்டு விடுகிறான் தம்பி. பின்னர் அண்ணனிடம் சென்று, “அண்ணா! உன் தோட்டத்துப் பழத்தை நான் புஜித்து விட்டேன்” என்று கூறுகிறான். உடனே அண்ணன், “என் அனுமதியின்றி பறித்ததால் உனக்கு களவாடிய தோஷம் ஏற்பட்டு விட்டது. நீ திருடிவிட்டதால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ இத்தனை காலமாக செய்து வந்த தவம் நலிந்து விடும்” என்கிறான்.
“சரி. தண்டனை என்ன?” என்று தம்பி கேட்கிறான்.
“தண்டனை அளிக்க வேண்டியது அரசனின் வேலை” என்கிறான் அண்ணன்.
உடனே தம்பி அரசனிடம் சென்று, “நான் ஒரு பழத்தைத் திருடிவிட்டேன். எனக்கு தண்டனை விதியுங்கள்” என்று கேட்கிறான்.
அரசன் அந்த முனிவனைப் பார்த்து, ‘ஐயா! உங்கள் அண்ணனின் தோட்டத்திலிருந்து ஒரு பழம் பறித்துக் கொண்டது பெரிய திருட்டுச் செயலில்லை. தண்டனை தேவையில்லை. சென்று வாருங்கள்” என்றான்.
“என்னை தண்டிக்காவிட்டால் உனக்குப் பாவம் வந்து சேரும்” என்றான் அந்த முனிவன். “அரசனானவன் தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் தவறு செய்தவனாகிறான்” என்றான்.
“சரி” என்கிறான் அரசன். அப்போதைய காலத்து தண்டனை விதிமுறைகளின்படி திருட்டுத்தனத்திற்கு கையை வெட்டுவதே தண்டனை.
“சரி. தண்டனையை நான் ஏற்கிறேன்” என்கிறான் முனிவன். அரச தர்மத்தின்படி அவன் கை வெட்டப்பட்டது.
உடனே அண்ணனிடம் சென்று மிகவும் திருப்தியோடு, “நான் மகிழ்ச்சியாக தண்டனை அனுபவித்தேன்” என்கிறான் தம்பி.
ஏனென்றால் தண்டனையை அனுபவித்த வருத்தத்தை விட தவத்தை காப்பாற்றிக் கொண்ட ஆனந்தம் அவனிடம் வெளிப்பட்டது. ஒருவேளை அதற்கான தண்டனையைப் பெறாமலிருந்திருந்தால் களவாடிய தோஷத்தால் அவன் இதுவரை மேற்கொண்டிருந்த தவம் வீணாகியிருக்கும்.
எவ்வாறு ஒரு வியாபாரி தனத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பானோ அதேபோல் சாதகன் தவத்தைக் காத்துக் கொள்ள முயற்சிப்பான்.
தவம் நலிவுறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த முனிவன் கையை வெட்டிக் கொள்ளக்கூட சித்தமாக இருந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த அண்ணன் அருகே பிரவகித்த நதியில் மூழ்கி எழுந்து வரச்சொன்னான். தம்பி சென்று நதியில் குளித்து எழுந்ததும் மீண்டும் அவனுக்குக் கை வந்து விட்டது. அதாவது அவன் தன் தவத்தை காத்துக் கொள்வதற்காக கடினமான தண்டனையை ஏற்கத் துணிந்த புண்ணிய குணத்திற்கு மகிழ்ந்து அண்ணன் அவனை ஆசீர்வதித்து கை திரும்பக் கிடைக்கும்படி செய்தான்.
அதனால் தவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டால் அதுவே ஒரு தவமாக மாறி காத்தருளுகிறது.
2.வஞ்சகம்:- யாரையாவது வஞ்சித்தால் நம்முடைய தவம் கரைந்து போகும். நாம் சிரமப்பட்டு ஜபம் போன்ற சாதனைகளைச் செய்து சம்பாதித்து சேமித்து கொண்ட தவச் சக்தி பிறரை வஞ்சிப்பதன் மூலம் வீணாகிறது. பிறருக்கு கஷ்டம் விளைவித்தால் நாம் செய்த தவம் போய்விடும்.
3.பொய்:- சத்தியத்தை மீறினால் தவம் போய்விடும். பொய் கூறினால் நம்முடைய தவம் கரைந்து போகும்.
4.அற்புதச் செயல்களைச் செய்வது:- இயற்கைக்கு விரோதமாக, எப்போதும் கண்டிராத, கேட்டிராத செயல்களைச் செய்தால் தவம் வீணாகிறது. இதனை அதர்மச் செயல்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் தவம் நலிவுறும்.
அதனால் தவசக்தியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்றால் திருடக்கூடாது, பிறரை வஞ்சித்து வருத்தக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, தகாத செயல்களைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட அம்சங்களை சாஸ்திரம் நமக்கு போதிக்கிறது.
தசரதன் கவலைப்பட்டபோது இராமன், “இது என்ன? தந்தையாரின் முகம் களையிழந்து காணப்படுகிறதே! தேஜஸ் தென்படவில்லையே! அசத்திய தோஷம் ஏற்பட்ட மனிதர் போல் உள்ளாரே!” என்று எண்ணுகிறான். அதாவது ருஷியின் தவம் பொய் உரைப்பதால் வீணாகி அவர் முகம் வர்ச்சஸ் இழந்து காணப்படும் என்பதை இங்கே தெரிவிக்கிறார். தசரதன், தான் அளித்த சத்திய வாக்கை நிறைவேற்றாவிடில் அவருடைய தவம் வீணாகி விடும். அதனால் தசரதரின் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே ராமச்சந்திரமூர்த்தி வனவாசத்திற்குச் சென்றார். இது ஒரு ரகசியம்.
எனவே தவசக்தியை காப்பதற்காக எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? என்று அறிந்து கொண்டோம். அது போன்ற தவம் நம்மையும் காத்து உலகையும் காத்தருள வேண்டும் என்று விரும்புவோம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



