அத்திவரதர்
அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்
ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019) மாத இதழில் Editorial by ஸ்ரீAPN சுவாமியின் சம்பாதகர் குறிப்பிலிருந்து
ப்ரஹ்மாண்ட புராணத்தின்படி, ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொருவரால் ஆராதிக்கப்படும் வரதன், கலியில் அனந்தாழ்வானால் ஆராதிக்கப்படுகிறான். தற்போது ஊரெங்கும் அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருள்வது குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது உண்மை.
ஆதி அத்திவரதர் திருக்குளத்தினுள் எழுந்தருளப் பண்ணப்பட்டது குறித்து பலவகையான ஊகங்கள் நிலவுகின்றன. ஒரு சில சிதைந்த கல்வெட்டு ஆதாரங்களும் இதுகுறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் வரதன் சந்நிதியில் நடைபெற்ற பாலாலயத்திற்காக (தாரு) மரத்தில் செய்யப்பட்ட பாலாலயப் பெருமாள் இவர். சம்ப்ரோக்ஷணம் முடிந்த பிறகு இப்பெருமாளைக் குளத்தில் எழுந்தருளப் பண்ணினர் என்பது ஒரு கருத்து.
ப்ரஹ்மதேவர் யாக வேள்வியில் உத்சவர் அவதரித்த பின்பு, இங்கு மண்டப ப்ராகார கோபுரங்களை நிர்மாணித்து, யாகத்தின் யூபஸ்தம்பம் (யாகத்தில் நடப்படும் மரத்தூண்) அத்தி மரத்தினைக் கொண்டு ப்ரஹ்மா மூலவரை ப்ரதிஷ்டை செய்தார். இவரே ஆழ்வார் ஆசார்யர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர். யுகங்கள் பல கடந்ததால் அந்தத் திருமேனி சற்றே பின்னப்பட்டதால் (சேதமடைந்ததால்) தற்போதுள்ள மூலவரை (சிலா ரூபமாக) ப்ரதிஷ்டை செய்து, ப்ராசீன அத்தி வரதரைக் குளத்தில் எழுந்தருளப் பண்ணினர் என்று ஒரு கருத்து.
கி.பி.1687 முதல் 1711 வரை ப்ரபவ ஆண்டு தொடங்கி இருபத்தியிரண்டு ஆண்டுகள், வரதர் உத்சவர் காஞ்சியை விடுத்து வெளியே செஞ்சி, உடையார்பாளையம், அணைக்கரை முதலிய இடங்களில் வாசம் செய்தார். ஒளரங்கசீப்பின் படையெடுப்பால் தென்னிந்தியாவில் பெரும் பதற்றம் நிலவியது.
இப்படி ஆலயங்களுக்கு ஆபத்து நேரிட்டபோது பெருமாளைக் காப்பாற்ற பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதே சமயம், மூலவிக்ரஹங்களின் பீடத்தில் தங்கம், வைரம், வைடூரியம் புதைக்கப்பட்டுள்ளதாக மொகலாயர்கள் நம்பியதால், அதைக் கொள்ளையடிக்க முயன்று மூல விக்ரஹங்களையும் சேதப்படுத்தினர். இதனால் ஆழ்வார் ஆசார்யர்கள் வழிபட்ட மூலமூர்த்தியின் திருமேனியைப் பாதுகாக்கக், குளத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள். கலவரங்கள் நீங்கி தேசத்தில் அமைதி நிலவிய பின்னர் உத்சவர் உடையார்பாளையத்தினின்றும் திரும்பி எழுந்தருளினார்.
இதன் நடுவில் மூலவிக்ரஹத்தைப் பாதுகாத்த பெரியோர்கள், அதை வெளியே சொல்லாத காரணத்தாலும், அவர்கள் மறைந்ததாலும், பின்வந்தவர்கள் புதிய மூலவரை சிலா ரூபத்தில் எழுந்தருளப் பண்ணினர். பின்னர் சுமார் நாற்பதாண்டுகள் கழித்து எதிர்பாராமல் குளம் வற்றியபோதோ, அல்லது தூர்வாரியபோதோ அதில் அத்திவரதரைக் கண்டு ஆனந்தித்து, பின்னர் அதுவே சம்ப்ரதாயமாக, “நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை” என வெளியே எடுத்து சேவிக்கின்றனர் என்பது மேலும் ஒரு கருத்து. இருபத்தியிரண்டு வருடங்களுக்குப் பின்பு உத்சவர் மீண்டும் காஞ்சி எழுந்தருளினார். வருடந்தோறும் பங்குனி உத்திரட்டாதியில் உடையார்பாளையம் உத்சவத்தை தற்போதும் வரதன் கண்டருளுகிறான்.
இது குறித்து விவரங்களை நாம் எழுதியுள்ள நமது சரித்திர நாவலாகிய “யமுனைத்துறைவர் திருமுற்றம்” எனும் நூலில் காணலாம். எது எவ்வாறாயினும், அத்தி வரதரை மறுபடியும் ஒருமுறை சேவிக்க அனைவருமே ஆவலாக உள்ளோம்.
நன்றி ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா