
நம் வேதக் கலாச்சாரம் உலகிற்கு அளித்த அற்புத விஞ்ஞானம் யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் ‘பிராணோபாசனை’ என்பது முதன்மையாக கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் பிராணனை உத்தேசித்து ஜபம் அல்லது தவம் செய்வது அல்ல. பிராணனை அதாவது மூச்சுக் காற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி பிராணாயாம வழிமுறைகளில் சாதனை செய்வதே பிராண உபாசனை அல்லது பிராண வித்யை!
பிராணன் அதாவது மூச்சுக் காற்று பற்றிய ஒரு அழகான அம்சம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. ஹிந்து சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் சாமானியர்கள் கூட இந்த விஷயத்தை அறிவார்கள். இதனை பஞ்சப் பிராணன்கள் என்பது வழக்கம்.
இத்தகைய ஐந்து வித பிராணன்களோடு கூடியதே பிராணசக்தி. உண்மையில் பஞ்சப் பிராணன்கள் என்ற கான்செப்ட் அதாவது கருத்துருவாக்கம் பிரபஞ்சத்தில் வேறு எங்குமே காண இயலாதது. நம் பாரதீய வேத விஞ்ஞானத்தில் மட்டுமே காணமுடியும்.
நம்மில் இருக்கும் பிராண வித்யை குறித்து இத்தனை அற்புதமான ஞானத்தை பல யுகங்களுக்கு முன்பே ருஷிகள் அளித்துள்ளார்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.
பஞ்சப் பிராணன்கள் என்றால் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்று கூறப்படும் ஐந்து வித மூச்சுக் காற்றுகள். உண்மையில் ஒரே ப்ராண சக்தி ஐந்து விதங்களாக உள்ளது என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்கள். இருக்கும் ஒரே பிராண சக்தி நம் உடலின் முழுமைக்கும் ஆதாரமாக உள்ளது.
இந்த இன்றியமையாத ப்ராண சக்தி ஐந்து விதமாகப் பணி புரிகிறது. இது எப்படிப்பட்டது என்றால், ஒரு அரசாங்கத்தில் ஒரு பிரதானமான அதிகாரி சில வேலைகளை சிலருக்கு ஒப்படைப்பார். அவ்விதம் வேலையை ஏற்றுச் செய்பவர்களைப் போன்றவை ‘உப வாயுக்கள்’. யார் இவர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கிறாரோ அவரைப் போன்றதே இந்த பிரதானமான வாயு.
பிரதம வாயுவைப் பிராணன் என்கிறோம். அதனால் நியமிக்கப்பட்டு அது அளிக்கும் சக்தியால் வேலை செய்யும் மீதியுள்ள நான்கு வாயுக்களும் அபானன் வியானன் உதானன் சமானன் என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
இதில் பிராணவாயு பிரதானமாக நம் வாழ்க்கையின் நிர்வாகத்தை நடத்துகிறது. அது முகத்தில் இருக்கிறது. இந்த முக்கியமான மூச்சுக்காற்றின் இடங்கள் கண் வாய் மூக்கு முதலியவை.
அபான வாயுவின் இடங்கள் மலம், சிறுநீர் துவாரங்கள். இதுவும் இந்த அமைப்பினை சிறப்பாக இயங்க வைத்து உடலின் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
பிராணனுக்கும் அபானனுக்கும் நடுவில் இருப்பது சமான வாயு. இது உண்ட உணவை செரிக்க வைத்து அன்னத்தின் சாரத்தை சமமாக அவயவங்களுக்கு அளிக்கிறது. இது இதன் முக்கிய வேலை.
உதான வாயு நாபி ஸ்தானத்தில் இருந்து கொண்டு உடல் உறுப்புகளில் துடிப்பை ஏற்படுத்துகிறது.
வ்யான வாயு உடலெங்கும் வியாபித்து இதய ஸ்தானத்தில் நின்றிருக்கிறது. இந்த வ்யானவாயு, நாடிகள் அனைத்திற்கும் பிராணசக்தியை பரவச்செய்கிறது.
இவ்விதமாக பஞ்ச பிராணன்கள் என்று நாம் கூறும் பிராண சக்தி பற்றி நம் ரிஷிகள் தெரிவித்துள்ள விஞ்ஞானம் மிகவும் இன்றியமையாதது. இவ்விதம் நம் உடலை நடத்துவிக்கும் பிராண சக்தியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலின் உள்ளே பிராணன்கள் எவ்வாறு உள்ளனவோ வெளியில் உள்ள ஜகத்திலும் பிராணன்கள் அவ்வாறே உள்ளன. வெளி உலகில் முக்கிய பிராணன் சூரியன்.
“ஆதித்யோ ஹவை பாஹ்ய ப்ராண உதயத் ஏஷ ஹேனம்” என்கிறார் ருஷி.
சூரியனே பிரபஞ்சத்தின் நேத்திரம் என்றார்கள். சூரியனுக்கு ‘ஜகத் சக்ஷு’ என்று பெயர். அதனால் சூரியன் கர்ம சாட்சியாக உள்ளான்.
நம் உடலில் ஞானேந்திரிய ஸ்தானங்களான கண் மூக்கு வாய் போன்ற இடங்களில் எவ்விதமாக பிராண சக்தி இருக்கிறதோ அதேபோல் சூரிய மண்டலத்தில் கூட பிராணவாயு இருக்கிறது. அதனால் சூரியன் பிரதமப் பிராணன்.
இனி பூகோளம் அபானவாயு ஸ்தானம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே திகழும் ஆகாயமனைத்தும் சமான வாயு ஸ்தானம். வாயு பகவான் வ்யான வாயு எனப்படுகிறார்.
இவ்விதம் வெளியில் உள்ள பஞ்ச ப்ராணன்களையும் நம் உடலில் உள்ள பஞ்ச பிராணன்களையும் பற்றி விவரித்து, இந்த பிராண வித்யையைத் தெரிந்துகொண்டு குருமார்களிடமிருந்து யோக சாஸ்திரத்தை அப்யாசம் செய்து பலவித பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு சாதனை செய்து வந்தால் அந்த யோகி அமரராகிறார் என்றும் கூறியுள்ளனர். அமரர் என்றால் ம்ருத்யு அதாவது இறப்பில்லாதவர் ஆகிறார் என்று பொருள். அதாவது கல்பங்களைத் தாண்டி கூட வாழ்ந்து வருவார் என்று பொருளோடு கூட தீர்காயுள் கொண்டிருப்பார் என்றும் பொருள்.
தீர்காயுள் பெற்றிருக்கும் காலம் வரை புலன்களும் புத்தியும் திடமாக வேலை செய்யும். யார் இவ்விதம் பிராண வித்யையைப் புரிந்து கொள்கிறாரோ அவர் இவ்வுலகில் அற்புதமான வாழ்க்கையைப் பெறுவதோடு கிரமமாக மோட்சத்தைக் கூடப் பெறுகிறார்.
அதனால்தான் மோட்ச சாதனையில் யோகத்தைப் பிரதானமாக கூறியுள்ளனர் பாரதீய ருஷிகள்.
இதுவரை பிராண சக்தியின் சிறப்பு பற்றி அறிந்துகொண்டோம். நவீன விஞ்ஞானம் இப்போதுதான் சிறிது சிறிதாக இவ்விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
புராதனமான பாரதீய விஞ்ஞானம் பல யுகங்களுக்கு முன்பே இதனைப் பற்றி உயர்ந்த அமைப்பாக, சிறந்த விஞ்ஞானமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதனை மேற்கொண்டு எத்தனையோ மகான்கள் சாதனை செய்து சித்தர்களாக உள்ளார்கள். அவர்களை நாம் யோகிகள் என்கிறோம். ஆனால் தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.
பூர்வ யுகங்களில் சாமானியர்கள்கூட அதாவது இல்லறத்தார் கூட அவர்களறிந்த வரையில், அவர்களால் முடிந்த அளவில் யோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். யோகம், தியானம் முதலான வழிமுறைகளால் அவர்கள் பலமான உடலும் திடமான மனமும் கொண்டிருந்தார்கள். எந்தவித பலவீனங்களும் இன்றி ஆயுளும் ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்ந்தார்கள்.
இப்படிப்பட்ட அழகிய பரிபூரணமான வாழ்க்கையை அளிக்கக்கூடிய யோக வித்யை பற்றி உபநிஷத்துக்களும் எடுத்துரைக்கின்றன.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அனைத்தையும் விடச் சிறந்தது பிராண சக்தி. அதனை உபாசிப்பது சிறந்தது என்று கூறுகிறீர்களே! பிராண சக்தியை விடச் சிறந்தது வேறு ஏதாவது உள்ளதா? இது கேட்கப்பட வேண்டிய நல்ல கேள்வி. தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயம்.
அதனால்தான் ஒருமுறை ‘ஆஸ்வலாயர்’ என்ற மகரிஷியிடம் ‘கௌசல்யர்’ என்ற ஜிஞ்ஜாசு இந்த வினாவை எழுப்பினார்.
“பகவன்! குத ஏஷ ப்ராணோ ஜாயதே?” – “எதிலிருந்து இந்த பிராண சக்தி உற்பத்தி ஆகிறது? அது உடலில் எவ்வாறு பிரவேசிக்கிறது?” என்று கேட்கிறார்.
அதற்கு பதிலாக பிராணன் பற்றி விவரித்து பிராண சக்திக்குக் கூட காரணமானவன், பிராண சக்தியை விடச் சிறந்தவன் யார் என்றால் ‘ஆத்ம ஸ்வரூபம்’ என்கிறார்.
இந்த ஆத்ம ஸ்வரூபத்தை நாம் பரமாத்மா என்றும் பரமேஸ்வரன் என்றும் அழைக்கிறோம். பிராணனை விட உயர்ந்தது ஈஸ்வர தத்துவம். அதாவது தெய்வ தத்துவம்.
அதனால், “நான் ஏதோ பிராணாயாமம் செய்கிறேன்… யோகா செய்கிறேன் என்பதால் எனக்கு கடவுள் தேவையில்லை’ என்று கூறுபவர்களுக்கு உபநிஷத் கூறும் பதில் என்னவென்றால் பிராணனை விடச் சிறந்தவன் இறைவன். அதனால் பரமாத்மா பிராணனுக்கும் பிராணன். “ப்ராணஸ்ய பிராண; !” என்கிறார்கள்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


