
ருஷிகளின் வாக்கியங்களை நாம் மனனம் செய்து வரும்போது நம் வாக்கியங்கள் பண்படுத்தப்படுகிறது. அந்தக்கரணம் எனப்படும் உள்ளம் சுத்தமாகிறது. தெளிவான ஞானம் கிடைக்கிறது. சுயநல எண்ணங்கள் குறைகின்றன. மனம் விசாலமாகிறது. இவை அனைத்தும் வாக்கு வடிவில் நம் பேச்சில் வெளிப்பட்டு பலருக்கும் பயன்படும்.
வாக்கு பற்றி வேதத்தில் அநேக இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“நிர்துரர்மண்ய ஊர்ஜா மதுமதி வாக் !” – என்று அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் காணப்படுகிறது.
“நம் பேச்சு எப்படியிருக்க வேண்டும் என்றால் சக்தியோடு கூடியதாக இருக்க வேண்டும். மதுரமாக இருக்கவேண்டும். பேச்சில் துஷ்ட சுபாவம் இருக்கக் கூடாது” என்று பிரதானமாக மூன்று இயல்புகளைக் கூறுகிறார் ருஷி.
“ஊர்ஜா” என்றால் நாம் பேசும் பேச்சு சக்தியுடையதாக இருக்க வேண்டும் என்று பொருள். “அவர் சொன்னார்…. ஆனால் அதையெல்லாம் யார் கேட்பது?” என்றல்லாமல் நம் பேச்சு செல்லுபடியாக வேண்டும். கூறிய சொற்களுக்கு உடனே பலன் கிடைத்தது என்றால் அந்தச் சொற்கள் சக்தியோடு கூடியது என்று பொருள்.
சிலர் பல உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். ஆனால் யாருமே அவற்றைப் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் யாரோ ஒருவர் வந்து ஒரு சொல் சொன்ன உடனே அனைவரும் அதை கடைப்பிடிப்பர். அவர் சொல்லைக் கேட்டு மாறுவார்கள். இது ஒரு தலைமை குணம்! அவ்வாறு நம் சொல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியோடு கூடியதாக இருக்க வேண்டும். இது பேச்சுக்கு இருக்க வேண்டிய குணம்.
அடுத்து “மதுமதி வாக்கு”. இது மிக அற்புதமான வார்த்தை. பேச்சு இனிமையாக இருக்கவேண்டும். மதுரம் என்றால் கேட்கும் போது இன்னும் கேட்க வேண்டும் போல் தோன்ற வேண்டும். கேட்டு வரும் போதே மனதிற்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும். அவ்வாறு பேச வேண்டும். அதனை மதுர வாக்கு என்பார்கள். அனுமனும் ஸ்ரீராமனும் இதுபோன்று மதுரமான சொற்களைப் பேசினார்கள் என்பதால் ‘மதுரபாஷி’ என்று அழைக்கப்பட்டார்கள்.
ஊர்ஜா, மதுமதி… இந்த இரண்டு குணங்களுக்கு அடுத்து மூன்றாவது ‘நிர்துர்மண்யா’. இதன் பொருள் நம் வாக்கில் துஷ்ட சுபாவம் இருக்கக்கூடாது. இதனை அறிந்து கொள்ள வேண்டும்.
சிலர் வெளியில் மிருதுவாக பேசுவதுபோல் இருக்குமே தவிர அவர்களின் உள்ளே எடுத்தெறியும் இயல்பு உள்ளது என்பது நமக்குத் தெரிந்துவிடும். “உங்களுக்கு என்ன குறைவு? உங்களிடம் நிறைய இருக்கிறது” போன்ற சொற்களை சிலர் சொல்வார்கள். அது நம்மைப் பார்த்து மகிழ்ந்து கூறிய சொற்கள் அல்ல. உள்ளே அசூயையும் அழுகையும் இருக்கும். அவ்வாறு வெளியில் கேட்காததால் அவர் கூறியவற்றை மதுர வாக்கு என்ற எடுத்துக் கொள்வதற்கு இல்லை. உள்ளே துஷ்ட சுபாவம் உள்ளது.
நம் சொற்களில் தீய எண்ணங்கள் இருக்கக்கூடாது. வெளியில் எவ்வாறு பேசினாலும் அதன் பின்னுள்ள எண்ணம் நிச்சயம் வெளிப்பட்டுவிடும். கேட்பவர் புத்திசாலியாக இருந்தால் புரிந்து கொண்டு விடுவார். அதனால் தீய எண்ணங்கள் நம் மனதிலும் பேச்சிலும் இருக்கக்கூடாது என்று முயற்சித்து சாதிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல. பிறரிடம் உரையாடும்போது நம் உள்ளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ருஷி. அடுத்தவர் மனதும் நம் மனதும் சமமாக இருக்க வேண்டும். இதற்கு ‘சஹ்ருதயம்’ என்று பெயர். ஆங்கிலத்தில் ஹார்மனி என்ற சிறந்த சொல் உள்ளது. சிருஷ்டியில் பிறரோடு நாம் சமமாக இருந்தால் சினேகம் ஏற்படுகிறது. அவர் மனதும் நம் மனதும் ஒரு சமமான நிலையில் இருக்க வேண்டும். இதனையே சமரசம், சமைக்யம், சமத்துவம் என்கிறோம். இது போன்ற சொற்கள் தற்போது அரசியலில் அதிகம் பயன்படுகின்றன. இவை பவித்திரமான வேதப் பொருளோடு கூடியவை. உண்மையில் வாக்கில் ஒரு அற்புதமான சமரச நோக்கு விளங்க வேண்டும்.
“அதி சம்யஞ்ச சம்ப்ரதா பூத்வா வாசம் வதத பத்ரயா !” – என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது.
“நாம் பரஸ்பரம் சமமான செயல், சமமான அறிவு, சமமான நியமங்களோடு பத்திரமான பேச்சு பேசுவோம்!” என்பது இதன் பொருள். இது ஒரு சிறந்த சங்கல்ப வாக்கியம்.
இதனைக் கொண்டு பிறரிடம் நட்போடு கூடிய உரையாடல் இருக்க வேண்டும் என்பதை அறியலாம். கருத்து வேறுபாடுகள்…. அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவர் நன்மையை மற்றவர் விரும்ப வேண்டும். அதுவே சமத்துவம். சமத்துவம் ஏற்பட்ட போது கட்டாயம் அடுத்தவரைப் புரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்ல. அத்தகைய சமத்துவம் இருக்கும்போது மன்னிக்கும் குணம் அங்கு நிலவும். அடுத்தவரோடு நாம் பேசும் பேச்சு கட்டாயம் அவருடைய நலனைக் கோரும் விதமாக இருக்க வேண்டும். அதன் மூலம் வாக்கிற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
அதனால்தான் அனுமனின் பேச்சை கேட்டு ராமச்சந்திர மூர்த்தி சொல்கிறார், “இவன் பேச்சை கேட்டாயா, லக்ஷ்மணா? ஒவ்வொரு சொல்லும் “சினேகயுக்தம் அரிந்தவம்” என்கிறார். ஒவ்வொரு சொல்லும் நட்போடு கூடியதாக இனிமையாக இருந்தது. அதுவரை அவர்கள் இருவருக்கும் இடையே பரிச்சயமேயில்லை. முதல் அறிமுகத்திலேயே சினேக பாவனை வெளிப்படுகிறது.

நட்போடு பேசுவது என்பது ஒரு பண்பாடு. பேச்சுதானே? பணமா என்ன செலவழிப்பதற்கு?
“ப்ரிய வாக்யப் ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா !” – என்கிறார் சுபாஷிதக்காரர்.
“பிரியமாக பேசினால் அனைவரும் மகிழ்வர் அல்லவா? அனைவரையும் மகிழச் செய்வதே இனிய பேச்சு! அதற்கு ஏதாவது செலவாகுமா என்ன? வாக்கிற்கு என்ன தரித்திரம்? ஹாய்யாகப் பேசு! பிறருக்கு இதம் அளிக்கும்படி நன்மை விளையும்படி பேசு!” என்கிறார்.
அதனால் தீய எண்ணங்களின்றி நட்போடும் இனிமையோடும் சக்தியோடும் கூடியதாக உள்ள வாக்கே உண்மையான வாக்கு! என்பதை அறிவோம்!
அப்படிப்பட்ட பேச்சைப் பேசக்கூடிய பண்பாட்டினை இறைவன் நமக்கு அருள்வாராக!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


