காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். நீல நிறப் பட்டுடன் வரதராஜனுக்கே உரிய அழகிய கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி, 48 நாட்கள் அன்பர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த வைபவத்தில், ஆலயத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் அத்தி வரதர் சயனக் கோலத்தில் காட்சி தந்தார். நேற்று ஜூலை 31ம் தேதியுடன் சயனக் கோல தரிசனம் நிறைவு பெற்றது.
இந்நிலையில், ஆக. 1 இன்று முதல், அத்திவரதர் பெருமான் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். நின்ற கோலத்தில் பெருமான் சேவை சாதிப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்வதன் காரணமாக, நேற்று மதியம் முதல் பொதுவழி தரிசனம், சிறப்பு தரிசனங்கள் நிறுத்தப் பட்டன. தொடர்ந்து நேற்று விடிய விடிய அத்திவரதர் பெருமானை நின்ற கோலத்தில் எழுந்தருளச் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
நின்ற கோல அத்திவரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் அதிகம்பேர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. பொது தரிசன வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தால் அவர்களை நிறுத்தி தங்க வைத்து தரிசனத்திற்கு பின்னர் அனுப்புவதற்காக, வடக்கு மாட வீதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் பேர் தங்கலாம் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசிப்பதற்கு தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிக்கு வந்துள்ளனர். அவர்களை கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே ஆலய நிர்வாகம் அனுமதித்து வருகிறது.
வைணவ மரபுத் தத்துவங்களின் படி, விஷ்ணு நான்கு நிலைகளில் தரிசனம் தருகிறார். நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என நான்கு கோலங்களில் தரிசனம் தருகிறார். நின்ற நிலையில், தன் திருக்கரங்களில் “மா சுச:” என்று, “என் அருகே வா! என்னைச் சரணடை! கவலைப்படாதே! உன்னைக் காப்பாற்றுவேன்” என்ற பொருள் படும் வகையில் வரம் தரும் கரத்தினராகவும், அபயம் அளிக்கும் கரத்தினராகவும் காட்சி தரும் பெருமாளாக வரதராஜனாக வணங்கப் படுகிறார். சயனத் திருக்கோலத்தில் அரங்கனாகவும், ரங்கநாதனாகவும் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதனாகவும், நடந்த கோலத்தில் வாமன, த்ரிவிக்ரமப் பெருமானாகவும் வணங்கப் படுகிறார். இவற்றில் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கும் வரதராஜப் பெருமானை உள்ளது உள்ளபடி இயல்பாக வணங்குவதற்கு வாய்ப்பு என்பதால், பக்தர்கள் அதிக அளவில் வருவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அத்திவரதரின் இன்றைய தரிசன புகைப்படங்கள்…