சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் 3 வயதிலிருந்தே, காம்பவுண்ட் காம்போசைட் ஆன்டான்டோம் (compound composite ondontome) என்ற அரிய நோயால் பாதிப்பு அடைந்துள்ளான். கீழ் பல்தாடை வீக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளான். அவனை மருத்துவ மனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் அச்சத்தால் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது.தற்பொழுது 7 வயதான அச்சிறுவனுக்கு வாயில் அறுவை சிகிச்சை செய்தபோது, வீக்கத்துக்கு காரணமாக இருந்த 200 கிராம் எடையுள்ள கட்டிபோன்ற ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்த கட்டிப் போன்ற சதையில் சிறிய, நடுத்தர, பெரிய என வகை,வகையாக 524 பற்கள் இருந்தது தெரிய வந்தது.
அந்த பற்களை வரிசையாக கொட்டி, மருத்துவர்கள் சிறுவனின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் காண்பித்தனர். உலக அளவில் இதுபோன்ற வாயிலிருந்து ஒரே சமயத்தில் 524 பற்கள் அகற்றப்படுவது இதுவே முதன்முறை என்பது மட்டுமல்ல, இதை மருத்துவர்களுமே ஒரு மருத்துவ விந்தையாகவும் பார்க்கின்றனர்.
தற்போது சிறுவன், வீக்கம் இல்லாமல் சிறந்த முறையில் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.