சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதை யாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் எதிரொலிக்கும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே சபரிமலையில் பக்தர்கள் குறைவான அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும்.இதனைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்
சபரிமலைக்கு செல்லவுள்ள பக்தர்கள் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில், மண்டல பூஜை தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.