
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு விழா என்றால் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் பாலமேடு வில் நடைபெறும் விழா முக்கிய விழாவாக கொண்டாடுவார்கள்.
தற்போது ஜல்லிக்கட்டு போட்டி கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பரவலாக கோயில் விழாக்களில் நடத்தப் படுகிறது.
இன்று அய்யம்பட்டி ஸ்ரீ வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே. உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் உறுதிமொழி ஏற்று போட்டியில் பங்கேற்றனர்.

620 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கி தங்க காசு ,பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளைப் பெற்று வருகின்றனர். அதேபோல மாடுகளும் வீரர்களிடம் சிக்காமல் தனது உரிமையாளர்களுக்கு பரிசை பெற்று கொடுத்து வருகிறது.




