திருப்புகழ்க் கதைகள் – பகுதி 219
– முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன்-
சீறல் அசடன் – பழநி
வினைப்பயன் தொடர்ச்சி
வரும் வினை என்பது வடமொழியில் ஆகாமிய கருமம் எனப்படும். இது முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள். திருவள்ளுவர் ஊழ்வினை என்று ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.
(திருக்குறள் எண் 380, ஊழ் அதிகாரம், அறத்துப்பால்)
என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கோட்பாட்டினை இளங்கோவடிகள் வழிமொழிகிறார். நாலடியாரில் பாடல் 101இல்
பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று
வல்லதாந் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையு மன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
அதாவது கன்று பசுவைத் தேடிக்கொள்ளுதலைப் போல, வினையுஞ் செய்தவனைத் தேடிக்கொள்ளும். இதே கருத்தை முனைப்பாடியார் தம்முடைய அறநெறிச்சாரம் 149ஆவது பாடலில் – கடமைகளை அவற்றின் தன்மை கெடாமல் செய்யும்போது அவற்றின் பலனில் ஆசை இருக்கக்கூடாது. அறச் செயல்களையும் அப்படித்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது அழிவில்லாத புகழை நிலைநிறுத்தும். மீண்டும் பிறக்கப்போகும் ஊருக்கும், கன்றைத் தேடி வரும் பசுவைப் போல் தொடர்ந்து தேடிக்கொண்டு வந்து பாதுகாக்கும். – என்று சொல்லுவார். அந்தப் பாடல்
பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின்கண் நில்லா தறஞ்செய்க – மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.
பகவத்கீதையில் வரும் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதை ஒத்த கருத்து இது.
ஒரு மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது. அதன் காரணம் என்ன? நோய்க்கு மூலகாரணம் எது? நன்றாகச் சிந்தியுங்கள். நோய்க்கு மூலகாரணம் இந்த உடம்பு. உடம்பைப்பற்றித் தான் நோய் விளைகின்றன. நெருப்பு விறகைப் பற்றித்தானே எரிகின்றது. நெருப்பை அகற்ற என்ன வழி? விறகை அகற்ற வேண்டும். எனவே நோயை நீக்க வேண்டுமாயின், உடம்பையே அகற்றி விடவேண்டும். நோய்களுக்கெல்லாம் உறைவிடமான இந்த உடம்பு நமக்கு வராதவண்ணம் புரியவேண்டும். அதாவது பிறப்பில்லா நிலையடைய வேண்டும்.
நல்வினை, தீவினை இரண்டுமே உடம்பைத் தருகின்றன. நல்வினை பொன்விலங்கு; தீவினை இரும்புவிலங்கு; பொன்னால் ஆனதாயினும் விலங்கு துன்பத்தைத் தானே தரும்? ஆகவே வினையை விட்டாலன்றி உடம்பு நீங்காது.
விதிகாணும் உடம்பை விடா வினையேன்,
கதிகாண, மலர்க்கழல் என்று அருள்வாய்?
மதிவாள்நுதல் வள்ளியை அல்லது, பின்
துதியா விரதா சுர பூபதியே!
என்ற கந்தரநுபூதியுள் ஒரு வரி அத்தனை கருத்துக்களையும் நமக்கு இனிது உபதேசிக்கின்றது., சுருங்கிய சொற்கள், விரிந்த உண்மைப் பொருள்கள். எனவே நாம் நல்வினைகளைப் பயன் கருதாமலும் (நிஷ்காம்யமாகவும்), தீவினைகளை அறவே செய்யாமலும் இருக்க வேண்டும். வினை நீங்க உடம்பு நீங்கும்; உடம்பு ஒழிய நோய் ஒழியும். ஆகவே அன்பர்களே வினை நீங்க முருகப் பெருமானைத் துதியுங்கள்.
முருகாய நம: ப்ராத:
முருகாய நமோ நிசி
முருகாய நம்: சாயம்
முருகாய நமோ நம: