spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: நற்றுணையாவது நமசிவாயமே!

திருப்புகழ் கதைகள்: நற்றுணையாவது நமசிவாயமே!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி- 262
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மூலமந்திரம் – பழநி
நற்றுணையாவது நமச்சிவாயமே

முருகன், திருமால் ஆகியோரின் திருநாமத்தை ஓதினால் மட்டுமே இன்பம் கிட்டுமா? இல்லையில்லை, சிவபெருமானின் திருநாமத்தை ஓதினால் எம்மான் நம்மை எல்லாத் துன்பத்திலிருந்தும் காப்பார். இதற்கு திருநாவுக்கரசரின் வாழ்வே சான்று. திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டு, மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்கள். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதினார். கல் தெப்பமாக மிதந்தது. அதில் மிதந்து வந்து, கரை ஏறினார். இதனை அவரே ஒரு பதிகத்தில் பாடுகிறார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

அதாவது சொல்லுக்கு துணையான வேத வடிவானவன்; ஜோதியானவன்; அவனுடைய பொன் போன்ற உயர்ந்த திருவடிகளைப் பொருந்துமாறு கை தொழ, கல்லோடு கட்டி, ஒரு கடலில் தூக்கிப் போட்டாலும் நல்ல துணையாவது நமச்சியாவே. இது பாட்டின் மேலோட்டாமான பொருள். இதனையே சற்று ஆழ்ந்து சிந்தித்தால் வேறு ஒரு பரிமாணம் புலப்படும். இந்த பிறவி என்பது பெரிய கடல்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார்
இறைவனடி சேரா தார்.

என்பார் வள்ளுவர். கடலை சும்மாவே நீந்திக் கரை காண்பது என்பது கடினமான காரியம். இதில் கல்லை வேறு கட்டிக் கொண்டு நீந்துவது என்றால்? பாசம், காமம், கோபம், என்று ஆயிரம் கல்லைக் கட்டிக் கொண்டு நீந்த நினைக்கிறோம். கற்றுணை பூட்டியோர் அதாவது கல்லை துணையாக பூட்டி என்கிறார். எப்படி பூட்டுவது, அல்லது கட்டுவது? நாம் செய்யும் நல்லதும் தீயதும் தான் நம்மை இந்த உலகோடு சேர்த்து கட்டும் கயிறு.

பொருந்தக் கை தொழ என்றால் – அருணகிரியார் இங்கே என்ன சொல்லவருகிறார்? இறைவனை கை தொழும், மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். மனமும் கை தொழுதலும் ஒன்றோடு ஒன்று பொருந்த வேண்டும். இறைவனைப் பார்த்து பட்டினத்தார் கேட்பார்.

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே

கை ஒன்று செய்கிறது; விழி வேறு எதையோ நாடுகிறது; மனம் வேறொன்றை சிந்திக்கிறது; நாக்கு மற்றொன்றைப் பேசுகிறது; உடல் வேறு எதையோ சார்ந்து நிற்கிறது; காது இன்னொன்றை கேட்கிறது. இதுவா பூசை? இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வழியில் ஓடுகிறது. அல்லாமல், அனைத்து புலன்களும் பொருந்தக் கை தொழ என்றார். வாழ்வில் எத்தனை சிக்கல்கள், நெருக்கடிகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள். இத்தனையும் சுமந்து கொண்டு பிறவி என்ற பெருருங்கடலை நீந்த நினைக்கிறோம். இதற்கு ஒரே துணை, அதுவும் நல்ல துணை நமச்சிவாய என்ற மந்திரம்தான். எனவேதான் நற்றுணை ஆவது நமச்சிவாயவே.

முருகப் பெருமான், ஸ்ரீமன் நாரயணன், சிவபெருமான் மட்டுமல்ல அன்னை அபிராமியைப் பணிந்தால்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

என்பார் அபிராமி பட்டர். அதாவது – கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே – என்பதாகும்.

முடிவாக, அன்பு நண்பர்களே, இறைவனைப் பணியுங்கள். அந்த இறைவன் சிவன் அல்லது முருகன் அல்லது விநாயகன் அல்லது தேவி எனப் பல பெயரில் இருக்கலாம். அனைவரும் ஒருவரே. உங்கள் இல்லத்துப் பெரியவர்கள் எந்தக் கடவுளை வணங்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களோ அந்தக் கடவுளை வணங்குங்கள். வீட்டிலேயே இறைவனைத் தொழுதல் ஒரு வகை. அருகாமையில் உள்ள ஆலயத்திற்குச் சென்று இறைவனை வனங்குதல் ஒரு முறை. இதைப் போன்ற பல முறைகள் உள்ளன.

இறைவனை வணங்கினால் மட்டும் போதுமா? போதாது. பின் என்ன செய்ய வேண்டும்? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe