
திருப்புகழ்க் கதைகள் பகுதி 359
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை
அவலின் சிறப்புகள் 2
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை அதிகமாக சேர்க்க கூடாது என்று சொல்வார்கள். வெள்ளை அரிசி இரத்த சர்க்கரையில் பாதிப்பை உண்டாக்கும். அதே நேரம் அவலானது இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. இதனால் திடீர் சர்க்கரை அதிகரிப்பு நிலை உருவாகாமல் தடுக்கப்படுகிறது. பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அவல் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவும் கூட.
உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்தால் உடல் உபாதைகள் அதிகரிக்க செய்யும். உடல் பருமன், இதயக்கோளாறுகள், இரத்த அழுத்தம் என பலவிதமான பிரச்சனைகள் உருவாகும். உணவின் மூலம் கொழுப்பை கரைக்க செய்ய விரும்பினால் அதற்கு சிவப்பு அவல் உதவும்.
குடலுக்கு ஆரோக்கியம் செய்வதில் தயிர் போன்று அவலும் உண்டு. இது புரோபயாடிக் நன்மைகளை கொண்டுள்ளது. அவல் உற்பத்தியின் போது செயல்முறை அதை நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. இது புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்ற விளைவாக ஏற்படும் நல்ல பாக்டீரியாக்களை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிவப்பு அவல் உதவுகிறது.
சிவப்பு அவல் சமைக்கப்பட்ட ஒரு கப் அளவில் 250 கலோரிகள் உள்ளது. அதே அளவு வறுத்த அவலில் 333 கலோரிகள் உள்ளன. இது நல்ல உணவும் கூட. இதை சாப்பிட்ட பிறகு சில மணி நேரம் உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
வெகு சிலர் சிவப்பு அவலை வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இது கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கும். எடை குறைக்க விரும்புபவர்கள் அவலை எடுக்கும் போது உப்புமாபோல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை இழக்கும் போது சத்தும் குறையாமல் இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிவப்பு அவலை பாலில் இலேசாக ஊறவைத்து தேங்காய்த்துருவல், ஏலத்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். நீரிழிவு இருப்பவர்கள் அவல் உப்புமா போல் செய்து சாப்பிடலாம். உப்புமா பற்றி பல நகைச்சுவைத் துணுக்குகள் படித்திருப்பீர்கள். அவையெல்லாம் உப்புமா ஏதோ உண்ணத்தகாத உணவு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆனால் நல்ல ரவை அல்லது அவல், உருளைக் கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சரியான அளவில் கலந்து உப்புமா செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
அர்த்தநாரீசுவரர் சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. தேவார பதிகங்களிலும் அர்த்தநாரீஸ்வரரை “வேயுறு தோளி பங்கன்” எனவும் “வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவனர்” எனவும் குறிப்பிட்டுகின்றனர்.
அர்த்தம் என்றால் பாதி எனப் பொருள். நாரி என்றால் பெண் எனப் பொருள். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அர்த்தநாரீசுவர உருவத்தில் அமைகின்றது. இது சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும்.
அர்த்தநாரீசுவர உருவத்துடன் தொடர்புடையது பிருங்கி முனிவரின் கதை. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்க்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு.