ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 3ம் நாள் உத்ஸவம்

Published:

srirangam day 3 - 2026

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 3ம் நாள் உத்ஸவத்தில், ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள். இன்று அதிவிசேஷமான அலங்காரம் பாசுரமும் கூட !

முத்தமிழ் விழா:

முத்தமிழுக்கேயுரிய விழாவான திருஅத்யயன உஸ்தவம் என்கிற வைகுண்ட ஏகாதசி பெரிய திருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாள் வழக்கம் போலே நம்பெருமாள் காலை தங்க பல்லக்கில் சிம்மகதியில் புறப்பாடு கண்டருளினார்.

திருவரங்கன் அலங்காரப் பிரியன். மூலவரா என்றால் இல்லை, மூலவர் பெரிய பெருமாள் ஒரு வஸ்திரம் ஒரு பெரிய மாலை மட்டுமே சாற்றி இருப்பார். அப்படி என்றால் யார் அலங்காரப் பிரியன்?! சாட்சாத் உத்ஸவர் நம்பெருமாளுக்காகத்தான்
இந்தப் பெரிய திருவிழாவே! இவருக்காகவே நடந்தேறுகிறது! அந்த வகையில் பட்டர் ஸ்வாமிகள் இன்று நம்பெருமாளை பல்வேறு திருவாபரணங்களைக் கொண்டு அழகுபடுத்தி உள்ளார்கள்.

நேற்றைய அணிகலன்களை சற்றே மாற்றினால் வேறு ஒரு அலங்காரம்!
இன்றைய அலங்காரம், சௌரிக் கொண்டை, கலிங்கதுரா, கிரீடத்தில் சந்திர சூரிய பதக்கம், வைர காது காப்பு, வைர அபய ஹஸ்தம், வலது திருக்கரத்தில் இரத்தின கிளி, மார்பில் புஜகீர்த்தி (இதை நேற்று பின்னழகில் சாதித்தருளினார்)
இடுப்பில் அரைச்சலங்கை, தசவதார பதக்க மாலை, பவள மாலை முத்து மாலை என்று
காசு மாலை , முத்து மாலை சாற்றி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
srirangam day 3 a - 2026

இன்று ஒரு நாள் மட்டும் பகல் 10 மூன்றாம் திருநாளில் விசேஷமாக ரத்தின திருவடி காப்பு அணிந்து இருப்பார். ஏன்?

இன்றைய அரையர் சேவையில்

  • சென்னியோங்கு – 11 பாசுரங்கள் (பெரியாழ்வார் திருமொழி)
  • திருப்பாவை – 30 பாசுரங்கள்
  • நாச்சியார் திருமொழி – 123 பாசுரங்கள் – முதலாயிரம்
    பெரியாழ்வார் திருமொழியில்
    “சென்னியோங்கு” மற்றும்”நாச்சியார் திருமொழியில்”,12 ம் பாசுரங்கள் ஈறாக,சேவிக்கபடும்.
    சென்னியோங்கு 7 வது பாசுரம் “திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்து..”
    “சரணாகதி தத்துவம்”
    என்பது வரை, அரையர் ஸ்வாமிகள் சேவித்து நிறுத்தி, நம்பெருமாள் திருவடிகள், தலைமேல் ஸ்தாபிக்கப்பெற்ற, இதற்காகத்தான் இன்றைய அலங்காரத்தில் நம்பெருமாளின் திருவடி இரத்தின திருவடி காப்பால் அழகு சேர்க்க பட்டு இருக்கும்.
srirangam day 3 b - 2026

அரையர் ஸ்ரீசடாரி சாதித்தல்:

பெருமாளின் திருவடியான ஸ்ரீசடகோபத்தை (ஸ்ரீசடாரி) அரையர்கள் தம்முடைய சிரசில் தரித்து, ஆழ்வார், ஆச்சாரியர்கள், கோஷ்டி மற்றும் பொதுமக்களுக்கும் சாதிப்பார்.
இன்று அரையர்கள் தீர்த்தம் சாதிப்பது இல்லை.

திருவரங்கத்தில் இந்தப் பெரிய திருவிழாவில் ஆண்டாள் எழுந்தருளும் வழக்கம் இல்லை. (ஒரு காலத்தில் திருவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார் என்பது செய்தி. தற்பொழுது அந்த வழக்கம் இல்லை) ஆகையால் கோவிலண்ணல் ஆண்டாளின் அண்ணனான உடையவர் ராமானுஜர் முன்பு மீண்டும் ஒரு முறை அரையர் ஸ்வாமிகள் திருப்பாவை மார்கழி திங்கள் பாசுரம் சேவிப்பர். ராமானுஜர் சூடிக் களைந்த மாலையை அரையர் ஸ்வாமிக்கு சாதிப்பர்.

  • செல்வராஜ் எஸ்
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img