
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழாவையொட்டி பந்தல் உள் அலங்காரப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான கொடியேற்றம் ஏப்.3ம் தேதியும், திருக்கல்யாணம் ஏப்.11ம் தேதியும் நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்தாண்டு திருக்கல்யாண வைபவம் வரும் ஏப்.11ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக ஏப்.3ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி கோயில் முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பந்தல் உள் அலங்காரப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் திருக்கல்யாண ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பங்குனி மாதம் 20ம் தேதி (03.04.2025) துவஜாரோஹணம் (கொடியேற்றம்) முதல் சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் வரை நடைபெறும் விழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து செல்வர்.
திருக்கல்யாண சேவையான 11.04.2025 வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு செப்புத்தேரோட்டம் (கோரதம்) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் நடைபெறும்.





