திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வே பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பௌர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பௌர்ணமி நேற்று மதியம் 12.15 மணியளவில் தொடங்கி இன்று (திங்கள்கிழமை) காலை 10.20 மணியளவில் நிறைவடைந்தது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமி மட்டுமின்றி வைகாசி மாத பிறப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சில இடங்களின் தரையில் சூடு தாங்க முடியாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நிழலை தேடி ஓடி சென்றனர்.
மாலை சுமார் 5 மணிக்கு மேல் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இரவிலும் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு பக்தர்கள் கற்பூரம், தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வசந்த உற்சவ விழாவில், நிறைவாக மன்மத தகனம் நடந்தது.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.





