
கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி , திருப்பரங்குன்றம் சோலைமலை முருகன் கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் சுப்பிரமணியரை வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய”சூரசம்ஹார லீலை “நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 25-ந்தேதி யாக சாலை பூஜை, காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை மாலை 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 31-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். இதே போல மற்ற முருகன் கோவில்களிலும் நாளை சூரசம்ஹார விழா நடக்கிறது.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பூஜை நேர மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும். எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும்.
4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. 5-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) மதியம் சூரபத்மனின் இளையசகோதரர் தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளாபூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். மாலை 4.30 மணியளவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




