
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. 24-ந்தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-ம் நாள் திருவிழாவான மயானக்கொள்ளை நேற்று நடைபெற்றது.
அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மயானம் நோக்கி புறப்பட்டார். பின்னர் பூசாரிகள் பிரம்ம கபாலத்தை எடுத்துக் கொண்டு ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். அங்கு மயானக்காளி முன்பு பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர்.

உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததும், பக்தர்கள் செலுத்தி இருந்த பொருட்களை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக்கொள்ளை என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தவுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 3-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை செவ்வாய்க்கிழமை காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் புதன் கிழமை தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.




