spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வாமன துவாதசி: ஓணம் பிறந்த தலம்!

வாமன துவாதசி: ஓணம் பிறந்த தலம்!

- Advertisement -
thirukkatkarai

–கிருஷ்ணா ராமலிங்கம்

பெரிய திருவடி, சிறிய திருவடி என்று கருட பகவானையும், சுந்தரனையும் (அனுமனையும்) பாகவதோத்தமர்கள் சொல்வதுண்டு.

ஆனால் அந்த திருவடியை காண்பதற்கு எத்தனை பக்தர்கள், பாகவதோத்தமர்கள் தினமும் காத்திருக்கும் நேரத்தில், அந்த பரந்தாமனே தனது பாதத்தினால் மூன்று உலகையும் அளக்கும் வேளையில், மகாபலி சக்கரவர்த்தி மூன்றாவது அடியை என் சிரசில் வையுங்கள் என்று தலைகுனிந்து நின்றான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்….?

அந்த மன்னனுக்கு பரந்தாமன் பாத ஸ்பரிசமும் கொடுத்து அவனுடைய வேண்டுதலையும் நிறைவேற்றினாரே… அந்த திருவடியின் மகிமையைச் சொல்வதுதான் இந்த வாமன அவதாரம்.

கொச்சியில் திருக்காக்கரை என்று ஒரு ஷேத்ரம் இருக்கிறது, அந்த புண்ணிய ஷேத்திரத்தில் தான் மகாவிஷ்ணு வாமனராக அவதரித்தார் என்றும் கேரளாவில் வாமன க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் தான் கொச்சி பல்கலைக்கழகம் அமைந்து இருக்கிறது. ஒருமாத்திற்கு முன்பிருந்தே ஓணம் பண்டிகை களைகட்டத் தொடங்கிவிடும்.

இன்றளவும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் கேரளாவில் திருவோண காலத்தில் இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி.

மகாபலி சக்கரவர்த்தி கதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தசாவதாரத்தில் தனிச்சிறப்பு மிக்க அவதாரம் என்றால் அது வாமன அவதாரம் தான். முழு மனித வடிவில் பகவான் எடுத்த முதல் அவதாரம் வாமன அவதாரம்.

மச்சாவதாரம் (மீன் நீர் சம்பந்தம்) கூர்மாவதாரம் (நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட ஆமை) வராகவதாரம் (பன்றியின் உருவில் வந்து) பூமியை காத்த அவதாரம், நான்காவதாக நரசிம்ம (மனித உடம்பும் சிம்மத்தின் தலையும்) அவதாரம், ஐந்தாவதாக (குள்ள மனித ரூபத்தில் பிரம்மச்சாரியாகத் தோன்றியது). அவதாரம் எடுத்த அந்த குறுகிய காலங்களிலேயே வாமனர் வேதங்கள் அனைத்தையும் பயின்று மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார் என்கிறது பாகவத புராணம்.

மேலும் இந்த அவதாரத்தில் அவர் மகாபலியை சம்ஹாரம் செய்யவில்லை. மாறாக பாதாள லோகத்துக்கே அனுப்பினார் என்பது தான் சிறப்பான அவதார நோக்கம். இந்த அவதாரத்தின் மூலம் பக்தனை ரட்சித்து அவனுக்கு அருளினார் இதை மார்ச்சால நியாயம் என்றும் சொல்லலாம். எப்படி முருகப் பெருமான் சூரபத்மனை தனது வாகனமாக மயிலையும், கொடியில் சேவலையும் போல இன்றளவும் அருள்புரிகிறார். முருகனை கும்பிடும் நாம் சூரபத்மனையும் சேர்ந்தே வணங்குகிறோம்.

பாதாள லோகத்தில் வாழும் காலம் முழுமையும் மகாபலியோடு விக்ர ரூபமாக எழுந்தருளியிருப்பதாகவும் வாக்குத் தந்த வண்ணமே இருந்தார் என்பதும் தான் இந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு.

அவ்வாறு மகாபலி பகவானின் திருவுருவைப் பாதாள லோகத்தில் பிரதிஷ்டை செய்த நாள்.

பகவான் ஓங்கி உலகளந்தபோது அவரின் இடுப்பு ஸ்வர்க்க லோகத்திலும், வயிறு மஹர்லோகத்திலும், மார்பு லோகத்திலும், கழுத்து தபோ லோகத்திலும், தலை சத்ய லோகத்திலும் இருந்தன என்கிறது புராணம்.

அத்தகைய மாபெரும் உருவெடுத்த அந்தப் பெருமாளின் திருவடிவே உலகளந்த பெருமாளாக ஆலயங்கள் தோறும் வணங்கப்படுகின்றன.

ஆம் இன்று துவாதசி திதி, இதை வாமன துவாதசி என்றும் அழைப்பார்கள். வாமன அவதாரம் எல்லோரும் அறிந்ததே. கொச்சியில் திருக்காக்கரை என்று ஒரு ஷேத்ரம் இருக்கிறது, அந்த ஷேத்திரத்தில் தான் மகாவிஷ்ணு வாமனராக அவதரித்தார் என்றும் கேரளாவில் வாமன க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் தான் கொச்சி பல்கலைக்கழகம் அமைந்து இருக்கிறது. ஒருமாத்திற்கு முன்பிருந்தே ஓணம் பண்டிகை களை கட்டத் தொடங்கிவிடும்.

இன்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் கேரளாவில் திருவோண காலத்தில் இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி.

பிரகலாதனனின் மகன் விரோசனனின் மகனே இந்த மகாபலி சக்கரவர்த்தி. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரகலாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் அவனிடம் கலந்து இருந்தது.

அசுரர்களின் தலைவனான மகாபலி தேவர்களுடன் ஏற்பட்ட போரில் கொல்லப்படுகின்றான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்பெற்று, மீண்டும் தேவர்களுடன் போரிட்டு தேவர்களையும், இந்திரனையும் அடித்து உதைத்து தேவலோகத்தைக் கைப்பற்றுகின்றான்.

இந்திரனும் தேவர்களும் மஹாபலியிடம் இழந்த தேவலோகத்தை கைப்பற்ற வேண்டும் என்று விஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள்.

விஷ்ணு மகாபலியை பலியிட வாமன அவதாரம் எடுக்க முடிவெடுக்கிறார், திருமாலின் அவதாரத்தில் வாமன அவதாரம் என்பது விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம்.

இந்திரனின் தாயான அதிதிக்கும் தந்தையான காசிபருக்கும் மகனாக வாமனர் என்ற பெயரில் மகனாகப்

புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் வேளையில் வாமனன் இப்பூமியில் அவதாரம் எடுத்தார்.

இந்தநாளை விஜய துவாதசி என்று பெரியோர்கள் பெயரிட்டனர். குள்ளமான உயரம், உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், இடது கையில் சிறுகுடை, வலக்கரத்தில் கமண்டலத்துடன் மகாபலியை பலியிட கிளம்புகின்றார்.

அந்த சமயம் மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்து கொண்டு இருக்கும் நேரம் பார்த்து, வாமனர் அங்கே செல்கிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறையில் மகாபலி சக்கரவர்த்தி, வாமனரை அழைத்து கால் கழுவி, மரியாதை செய்வித்து, தங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், தருகின்றேன் என்கிறார்.

உடனே அங்கு வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என சுக்கிராச்சாரியார் தனது தபோவலிமையால் வந்திருப்பது யாரென்று தெரியவர, மகாபலியை அழைத்து, அந்த குள்ளனை நம்பாதே, அவனுக்கு எதையும் தரவேண்டாம் என எச்சரிக்கிறார்.

தனது குருவின் எச்சரிக்கையை ஏற்க மறுத்த மகாபலி, தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய முனையும் போது, சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டலத்திலிருந்து தாரையாக நீர் வரும் ஓட்டையை அடைத்து கொள்கிறார்.

வாமனர் தன் குடையிலிருந்து ஒரு குச்சியை எடுத்து, அந்த ஓட்டையைக் குத்த நீர் தடையில்லாமல் வருகின்றது. சுக்கிராச்சாரியாருக்கு அதனால் ஒரு கண் பார்வையும் போய் விடுகிறது.

அதன் பிறகு தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்று மகாபலி சக்ரவர்த்தி கேட்க, வாமனர் சக்ரவர்த்தியிடம் எனக்கு என்னுடைய காலால் மூன்றடி மண் வேண்டும் எனக் கேட்கிறார்.

இவரது குள்ள பிரம்மச்சாரிக்கு மூன்றடி மண் என்ன? எத்தனை அடி மண் வேண்டுமானாலும் தரலாம் என்று மனதில் நினைத்த மகாபலி, உடனே தருகின்றேன் என நீரைத் தெளித்து வாக்களிக்கிறார்.

அவ்வளவு தான் அந்த குள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து ஓரடியால் பூமியை அளக்கிறார், இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளக்கிறார், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று வாமனர் கேட்க. தான் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காக, மூன்றாவது அடியினை எனது தலையில் வையுங்கள் என்று கூறுகிறான் மகாபலி.

மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அப்படியே அவனை பாதாளத்தில் அழுத்தி சம்ஹாரம் செய்கின்றார் வாமனான விஷ்ணு பகவான். அதுமுதல் விஷ்ணுவை ஓங்கி உலகலந்த உத்தமன் / திருவிக்ரமன் என்று போற்றுவர் மக்கள்.

பகவான் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் நீங்கியது. அந்தச் சமயத்தில், “பகவானே, ஒரு வரம் வேண்டும்” என்றான். மகாபலி, ‘என்ன?’என்று கேட்க, “பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத்தப் படும் இந்த நாள் மக்களால் போற்றப் படவேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்” என்றான். அந்த வரத்தை அருளி, ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய் என்ற வரத்தையும் தருகின்றார் பகவான் மஹாவிஷ்ணு.

இவன் முற்பிறவியில் எலியாக இருந்தான். இந்த எலி, வேதாரண்யம் கோயில் கருவறையில் நுழைந்து அங்கு எரிந்துக்கொண்டிருந்த சர விளக்கில் உள்ள நெய்யை உண்பதற்காக மேல் நோக்கி ஏறிய போது அவ்விளக்கு அணையும் தருவாயில் இருந்தது.

எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது.

அதன் விளைவாக மறுபிறவியில் கேரள நாட்டின் சக்கரவர்த்தியாக மகாபலி என்ற பெயருடன் அசுர குலத்தில் பிறந்தது அந்த எலி.

இந்த பண்டிகை கேரள தேசத்திற்கு மட்டும் அல்ல, நமது தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்று பண்டைய தமிழ் இலக்கியம் மூலம் அறியமுடியும்.

அதிலிருந்து சில துளிகள் –

”நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்

கறைநிறத்தெலி தன்மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகமெல்லாம் குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை

வீரட்டனாரே” எனப் பாடிய திருநாவுக்கரசர் பெருமான்.

சங்க காலத்தில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆட்சியில் மதுரையில் திருவோணத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று சங்க நுாலான மதுரை காஞ்சி தெரிவிக்கின்றது.

இந்த விழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது பற்றி நுாலாசிரியர் மாங்குடி மருதனார் விளக்கமாக கூறியுள்ளார். இந்த விழாவில் யானை சண்டை முக்கிய இடத்தை பெற்றிருந்தது. சண்டை நடைபெற்ற களம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி அந்த நுாலில் கூறப்பட்டுள்ளது.

தமுக்கம் மைதானத்தில் யானை சண்டை நடைபெற்றதாக கூறுவர். ‘தமுக்கம்’ என்றால் யானைகள் சண்டை போடும் இடம் என்று வின்ஸ்லோவின் தமிழ் ஆங்கில அகராதி கூறுகின்றது.

யானைகள் சண்டையிடும் களத்தை பற்றி, ”குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை” என்று திருவள்ளுவரும் கூறுகிறார்.

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யாணை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை என்று சங்கப்பாடல்களிலும் வருகிறது.

பாண்டியன் நெடுஞ்செழியன் திருவோண நாளில் சாதனை படைத்த போர் வீரர்களுக்கும், இசை வாணர்களுக்கும், வல்லுனர்களுக்கும் விருது வழங்கினார் என்று மதுரை காஞ்சி குறிப்பிடுகிறது.

நாம் கோவிலுக்கு சென்றால் அவருடன் பிஸினஸ் டீலிங் செய்கிறோம். திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் ஒரு திருப்பம் நேருமடா என்று சொல்வார்கள், அங்கு சென்றால் அவனிடம் டீலிங் செய்யாம, அவன் பாதத்தை தரிசனம் செய்தாலே போதும் திருப்பத்தோடு விருப்பமும் நிறைவேறும். .

திருவடியின் மகிமையைச் சொல்வது தான் இந்த அவதாரம்.

பகவானிடம் மகாபலி மன்னன் வாங்கிய வரத்தின்படி ஆவணி மாதம் திருவோண நாளில் கேரள மக்களைக் காண இன்றும் வருவதாக…வருகிறார்…. என்பது கண்கூடு.

அன்றைய தினத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருந்து, வாசலில் கோலம் வரைந்து சரக்கொன்றை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு விருந்தினர்கள் புடைசூழ ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது ஹஸ்த நட்சத்திரம் முதல் அவிட்டம் நட்சத்திரம் வரை ஒரே குதூகலம் பொங்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு வீட்டிலும் வந்து அருள்வதாக இன்றும் நம்பப்படுகின்றது. இந்நாளின் கேரளாவில் ஓணம் பண்டிகையாக இந்நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.

இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் வணக்கங்கள்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe