சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே “படைவீடுகள்” எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை:
1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
3. திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
4.திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
6.பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகப்பெருமான். மலையும், மலையைச் சார்ந்த இடமுமே “குறிஞ்சி” எனப்படும். எனவே குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமே.
1.திருப்பரங்குன்றம் :
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற முருகப்பெருமான் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டு, அமர்ந்த கோலத்தில் காடாசித் தருகிறார். இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் “திருப்பரங்குன்றம்'( பரமன்) எனப்படுகிறது.
2. திருச்செந்தூர் :
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் “திருச்சீர் அலைவாய்” என்ற பெயரும் இலக்கியத்தில் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த கோவிலும் கடற்கரையோரமாக உள்ள சிறிய குன்றின் மீதே அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் உள்ள திருமால் பள்ளிகொண்டிருக்கும் இடத்தில் சந்தன மலையை உட்புறமாக விட்டே கோயிலை அமைத்துள்ளனர்.
முருகப்பெருமான் அசுரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம் திருச்செந்தூர். தனது படைவீரர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக தனது வேலால் நிலத்தில் ஊன்ற அங்கே சுவையான நீரூற்று பீறிட்டதாம். இதுவே ‘நாழிக்கிணறு” எனப்படுகிறது. கடற்கரையோரத்தில் ஒரு நல்ல நீருள்ள சிறிய கிணறு அமைந்திருப்பதே அதிசயமாகும்( நாழியின் அளவே விட்டமுள்ள கிணறு).
3.பழநி :
சித்தர்கள் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம்.
அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட முருகனின் சிலையாகும்.
சிவபெருமானிடமிருந்து ஞானப்பழத்தைப் பெறமுடியாத கோபத்தில் முருகன் ஆண்டிக்கோலத்தில் நிற்க, பழம்நீ! என முருகனை அழைத்த மலையாதலால், இம்மலைப் பழநி எனப் பெயர் பெற்றது.
4.சுவாமிமலை:
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் “”சிவகுருநாதன்” என்றும் “தகப்பன் சாமி” என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார்.
5.திருத்தணி
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது.
அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. சர்வ வல்லமையுடைய முருகன், சூரனை வென்று சினம் தணிந்து, தணிகை வேலனாக இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
6. பழமுதிர்ச் சோலை:
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது பழமுதிர்ச்சோலை (சோலைமலை) .மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. தமிழ்பாபாட்டி ஔவையாரிடம், ” சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக இங்கே முருகன் அருள்புரிகிறார். “அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார். ஞான வடிவான ஞானப் பண்டிதனை வணங்கி, நாம் நல்லருளைப் பெறுவோமாக.?
ஓம் சரவணபவ – நன்றி: சனாதன தர்மம்




