- ஐ.பி.எல் 2022 – பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் 27.03.2022 இரண்டாவது ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
இன்றைய இரண்டாவது ஐ.பி.எல் போட்டி மும்பை டி.ஒய். பட்டில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெங்களூரு அணியை முதலில் மட்டையாடச் சொன்னது.
முதல் ஆறு ஓவர்களான பவர் ப்ளே ஆட்டத்தில் பெங்களூரு அணி 63 ரன்கள் எடுத்தது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அநுஜ் ராவத் 21 ரன் எடுத்து ஏழாவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் விராட் கோலியும் ட்யூ பிளசியும் சேர்ந்து 17.1 ஓவர் வரை ஆடினர். அணியின் ஸ்கோர் 168 ஆக இருக்கும்போது பிளசி அவுட்டானார். அதன் பின்னர் ஆட வந்த தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவர் மீதமுள்ள 17 பந்துகளில் 14 பந்துகளை ஆடி 3 ஃபோர், 3 சிக்சருடன் 32 ரன் எடுத்தார். அதனால் பெங்களூரு அணி 205 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி பெங்களூருவை விட அதிரடியாக விளையாடியது. முதல் ஆறு ஓவர்களில் இந்த அனியும் 63 ரன்கள் எடுத்தது.
மயாங்க் அகர்வால் (32 ரன்), ஷிகர் தவான் (43 ரன்), பானுகா ராஜபக்ஷா (43 ரன்) எடுத்தனர். 13ஆவது ஓவருக்குப் பின்னர் மட மடவென மூன்று விக்கட்டுகள் விழுந்தன.
அதன் பின்னர் தமிழக வீரர் ஷாரூக் கானும், ஒடியன் ஸ்மித்தும் விளையாட வந்தனர். 16ஆவது ஓவரில் 6 ரன்; 17ஆவது ஓவரில் 8 ரன், அதில் 3 வைட் பந்துகள்; 18ஆவது ஓவரில் 25 ரன்கள்; இதில் ஸ்மித் 22 ரன்கள் அடித்தார்.
19ஆவது ஓவரில் 13 ரன்கள். ஆக 6 பந்துகள் மிச்சமிருக்க 208 ரன் கள் எடுத்து, ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இன்று ஆடப்பட்ட இரண்டு ஆட்டங்களுமே அதிக ரன்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டிலும் இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி பெற்றது.