ஐபிஎல் 2022 – 17 ஏப்ரல் 2022 இரண்டு ஆட்டங்கள்
– K. V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஏப்ரல் பதினேழாம் நாள் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கட் மைதானத்தில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
பஞ்சாப் vs சன்ரைசர்ஸ்
பஞ்சாப் அணி (151 ரன்னுக்கு ஆல் அவுட் – லிவிங்க்ஸ்டோன் 60, ஷாருக் கான் 26 புவனேஷ் குமார் 3/22, உம்ரான் மாலிக் 4/28) சன்ரைசர்ஸ் (3 விக்கட் இழப்பிற்கு 152, மர்க்ரம் 41, பூரன் 35, அபிஷேக ஷர்மா 31) அணியிடம் 7 விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. பஞ்சாப் அணியின் அணித்தலைவர் மயாங்க் அகர்வால் காயம் காரணமாக இன்று ஆடவில்லை. அவருக்குப் பதிலாக பிரபா சிம்ரன் சிங் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஷிகர் தவான் இன்று பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். முதல் மூன்று விக்கட்டுகள் 6.2 ஓவருக்குள் விழுந்துவிட்டன.
லியம் லிவிங்க்ஸ்டோன் 33 பந்துகளில் 60 ரன் எடுத்தார். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. தமிழக வீரர் ஷாருக் கான் 28 பந்துகளில் 26 ரன் எடுத்தார். 19ஆவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 151ஆக இருக்கும்போது லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த உம்ரான் மாலிக் ஓவரில் இரண்டாவது பந்தில் ஒடியன் ஸ்மித், நாலாவது பந்தில் ராகுல் சாஹர், ஐந்தாவது பந்தில் வைபவ் அரோரா, ஆறாவது பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் ஆட்டமிழந்தனர். எனவே அந்த ஓவரில் ரன் எதுவும் தராமல் உம்ரான் மூன்று விக்கட் எடுத்தார். கடைசி விக்கட் ரன் அவுட் முறையில் விழுந்தது.
இரண்டாவதாக விளையாடவந்த சன்ரைசர்ஸ் அணி நிதானமாக ஆடி, எளிய இலக்கை அடைந்தது. அந்த அணியின் நாலாவது ஓவரில் கே வில்லியம்சன் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி (34 ரன்) ஒன்பதாவது ஓவரிலும், அபிஷேக ஷர்மா (31 ரன்) 11ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் எய்டன் மர்க்ரம் (27 பந்துகளில் 41 ரன்), நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 35 ரன்) இருவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
சன்ரைசர்ஸ் அணி முதல் நான்கு இடங்களுக்குள் புள்ளிப் பட்டியலில் வந்து விட்டது.
சென்னை vs குஜராத்
மில்லரின் த்ரில்லர் ஆட்டம் :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (ஐந்து விக்கட் இழப்பிற்கு 169 ரன் – ருதுராஜ் 73, அம்பாடி ராயடு 46) குஜராத் டைடான்ஸ் (19.5 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 170 ரன் – டேவிட் மில்லர் 94, ரஷீத் கான் 40) அணியிடம் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற குஜராத் அணி சென்னை அணியை மட்டையாடச் சொன்னது. சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. எப்போது நன்றாக ஆடும் ராபின் உத்தப்பா மூன்றாவது ஓவரில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மொயின் அலி ஆறாவது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த அம்பாடி ராயடு தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாடுடன் இணைந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இருப்பினும் குஜராத் அனியின் பவுலர்களில் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி 20 ஓவர் முடிவில், ஐந்து விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்திருந்தது.
குஜராத் அணியில் இன்று காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அணித்தலைவராக இருந்தார். அந்த அணி எட்டாவது ஓவர் முடிவில் 48 ரன் எடுத்து நாலு விக்கட்டுகளை இழந்திருந்தது.
ராகுல் திவேத்தியாவும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் (94 ரன், 51 பந்துகள், 8 ஃபோர், 6 சிக்சர்கள்) மட்டும் நம்பிக்கையோடு ஆடிக்கொண்டிருந்தார். 17ஆவது ஓவர் முடிவில் 18 பந்துகளில் 48 ரன் எடுக்கவேண்டிய நிலை. அந்த ஓவரில் ரஷீத் கான் 6,6,4,6,1 என ரன் அடித்து 25 ரன்கள் அந்த ஓவரில் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரில் 10 ரன் எடுக்கப்பட்டது; ஆனால் ரஷீத் கான் அல்சாரி ஜோசப் இருவரும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் சிங்கிள் எடுக்க வாய்ப்பிருந்தும் மில்லர் எடுக்க வில்லை. மூன்றாவது பந்து சிக்சரானது. நாலாவது பந்தில் மில்லர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அந்த பந்து இடுப்பிற்கு மேலே சென்றதால் நோ பால் ஆனது. அடுத்த ஃப்ரீ ஹிட்டில் மில்லர் நாலு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடி மில்லர், குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இந்த வெற்றியோடு, 10 புள்ளிகள் பெற்று குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது