ஐ.பி.எல் மே 14, 2022 – கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்
– K. V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஐபிஎல்லின் 61ஆவது ஆட்டம் புனே கிரிக்கெட் மைதானத்தில் கொல்கொத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. கொல்கொத்தா அணி (177/6, ரசல் 49*, சாம் பில்லிங்ஸ் 34, ரஹானே 28, ராணா 26, உம்ரான் மாலிக் 3/32) சன்ரைசர்ஸ் அணியை (123/8, அபிஷேக் ஷர்மா 43, மர்க்ரம் 32, ரசல் 3/22) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற கொல்கொத்தா அணி மட்டையாட முடிவுசெய்தது. கொல்கொத்தா அணிக்கு இன்று வெங்கடேஷ் ஐயரும் ரஹானேயும் தொடக்க வீரர்களாக விளையாட வந்தனர். வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நித்தீஷ் ராணா (26 ரன்) 7.3 ஓவரில் ஆட்டமிழந்தார்.
அஜிங்க்யா ரஹானே 8ஆவது ஓவர் முடிவில் 28 ரன் எடுத்து அவுட்டானார். ஷ்ரேயாஸ் ஐயர் (15 ரன்), சாம் பில்லிங்ஸ் (34 ரன்) ரிங்கு சிங் (5 ரன்) விரைவில் ஆட்டமிழந்து விட்டனர். கடைசி ஓவரில் 20 ரன் (ஒரு ஃபோர், மூன்று சிக்சர்) அடித்து ஆண்ட்ரூ ரசல் (49 ரன்) அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 177 ரன்னிற்கு உயர்த்தினார்.
அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன் எண்ணிக்கையைப் பெற்றனர். தொடக்கவீரர் அபிஷேக் ஷர்மா 49 ரன்; எய்டன் மெக்ரம் 32 ரன்; ஷஷாங்க் சிங் 11 ரன். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழந்தனர். ரன்ரேட் ஒரு முறைகூட கொல்கொத்தா அணியின் ரன்ரேட்டை விட அதிகரிக்கவில்லை.
பதினெட்டாவது ஓவரில் ரசல் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 123 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி 12 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.