உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினோராம் நாள் – 26.10.2022
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று சூப்பர் 12 ஆட்டங்களில் குரூப் 1 பிரிவில் இரண்டு ஆட்டங்கள் மெல்பர்னில் நடைபெற்றன. இல்லையில்லை; நடைபெறவில்லை. அப்படியும் இல்லை ஒரு ஆட்டம் அரைகுறையாக நடந்தது; மற்றொன்று நடைபெறவில்லை. மெல்போர்ன் நகரில் பெய்த மழையால் ஆட்டங்கள் தடைபட்டன.
முதல் ஆட்டம் அயர்லாந்து – இங்கிலாந்து
அயர்லாந்து அணி (19.2 ஓவரில் 157 ஆல் அவுட், பல்பிர்னி 62, டக்கர் 34, மார்க் வுட் 3/34, லிவிங்ஸ்டோன் 3/17) டக்வெர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணியை (14.3 ஓவரில் 5 விக்கட் இழப்பிற்கு 105 ரன்) வெற்றிகண்டது.
இந்த ஆட்டம் மழையால் பல முறை பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீசத் தீர்மானித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்கு நன்றாகவே பந்து வீசினார்கள். இதனால் அயர்லாந்தின் ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இருப்பினும் பால் ஸ்டிர்லிங் (14 ரன்), பல்பர்னி (62 ரன்), டக்கர் (34 ரன்), கேம்பர் (18 ரன்), டிலானி (12 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 157 ரன் எடுத்தது.
அடுத்து விளையாட வந்த இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பட்லர் (பூஜ்யம்), ஹால்ஸ் (7 ரன்), பென் ஸ்டோக்ஸ் (6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் (37 பந்துகளில் 35 ரன்), ப்ரூக் (21 பந்துகளில் 18 ரன்), மொயின் அலி (12 பந்துகளில் 24 ரன்) ரன் ரேட்டை உயர்த்த முனைப்பு காட்டவில்லை. இன்னமும் ஆறு ஓவர்கள் இருக்கின்றது வெற்றிபெற்று விடலாம் என்று அலட்சியமாக மெதுவாக ஆடினார்கள்.
ஆனால் 14.3 ஓவரில் மழை மீண்டும் வந்துவிட்டது. அதன் பின்னர் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி ரன் கணக்கிடப் பட்டது. இங்கிலாந்து அணி ஒருவேளை 110 ரன் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். 105 ரன் கள் மட்டுமே எடுத்திருந்ததால் ஐந்து ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டம் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடப்பதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.