
இந்தியா இலங்கை இரண்டாவது டி20 ஆட்டம் – பூனா – 05.01.2023
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணி (206/6, ஷனகா 56*, குசால் மெண்டிஸ் 52, அசலங்கா 37, நிசாங்கா 33, உம்ரான் மாலிக் 3/48, அக்சர் படேல் 2/24, சாஹல் 1/30) இந்திய அணியை (190/8, அக்சர் படேல் 65, சூர்யகுமார் யாதவ் 51, ஷிவம் மாவி 26, மதுஷங்கா 2/45, ரஜிதா 2/22, ஷனகா 2/4) 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. இன்று இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ராகுல் திரிபாதி, ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக அர்ஷதீப் சிங் ஆகிய இருவரும் இன்று ஆடினர். முதல் ஓவரை ஹார்திக் பாண்ட்யா வீசினார்; அதில் அவர் இரண்டு ரன்கள் கொடுத்தார்.
இரண்டாவது ஓவரை அர்ஷதீப் வீசினார்; அதில் அவர் இரண்டு நோபால் போட்டார்; அதில் ஒன்று பவுண்டரிக்கும் மற்றொன்று சிக்சருக்கும் போனது. அதனால் அந்த ஓவரில் 19 ரன் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஓவரில் ஹார்திக் 11 ரன் கொடுத்தார். நாலாவது ஓவரில் ஷிவம் மாவி 15 ரன் கொடுத்தார். அக்சர் படேல் வீசிய ஐந்தாவது ஓவரில் 2 ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆறாவது ஓவரில் சாஹல் ஆறு ரன் கொடுத்தார். இப்படி பவர்ப்ளேயில் இலங்கை அணி 55 ரன் எடுத்தது. இந்தியாவின் இரண்டு ஸ்பின்னர்களும் நன்றாக பந்துவீசினர்.
மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரிக் கொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது. இதில் 18ஆவது ஓவரில் 21 ரன்; 19ஆவது ஓவரில் 18 ரன்; 20ஆவது ஓவரில் 20 ரன்; ஆக கடைசி மூன்று ஓவரில் மட்டும் 60 ரன்.
அடுத்து விளையாட வந்த இந்திய அணிக்கு இஷான் கிஷன் (2 ரன்), சுப்மன் கில் (5 ரன்), ராகுல் திரிபாதி (5 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஹார்திக் பாண்ட்யா 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் அக்சர் படேலும் நன்றாக ஆடினர்.
ஆயினும் இந்திய அணி வீரர்கள் ஆடிய விதத்திற்கு இந்த டி20 ஆட்டத்தில் அவர்கள் தோற்பதே நியாயமானது. எனவே இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.




