
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதிமூன்றாவது ஆட்டம் ராஜஸ்தான் vs மும்பை – கௌஹாத்தி – ஏப்ரல் 7
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (32 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (14 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இரு அணிகளுக்கும் 11 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. அனுபவமிக்க பும்ரா ஓவர்களில் புதிய வீரர் சூர்யவன்ஷி எப்படி ஆடுவார் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த 15 வயது நிரம்பாத பையன் பும்ராவின் முதல் பந்தை சிக்சர் அடித்தான். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 4, 6, 4, 0, 4, 4 என 22 ரன்கள் அடித்தார். அடுத்த பும்ரா ஓவரில் சூர்யவன்ஷி இரண்டு சிக்சர் அடித்தார். மூன்றாவது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர்களும் சூர்வன்ஷி ஒரு சிக்சரும் அடித்தனர். ஐந்தாவது ஓவரில் சூர்யவன்ஷி ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் துருவ் ஜுரல் (2 ரன்) ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் ரியன் பராக் (20 ரன்) ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 77 ரன், மற்றும் ஹெட்மயர் 6 ரன் அடித்திருந்தனர்.
ராஜஸ்தானின் இளைய வீரர்கள் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அனுபவமிக்க மும்பை எப்படி விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பொடு மும்பை இன்னிங்க்ஸ் தொடங்கியது. ரியன் ரிக்கிள்டன் (8 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மா (5 ரன்) அவுட் ஆனார். ஹார்திக பாண்ட்யா (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் திலக் வர்மாவும் (14 ரன்) அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரூதர்ஃபோர்ட் (8 பந்துகளில் 25 ரன்) 8ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அதிரடியாக ஆடிய நமன் தீர் (25 ரன்) 9ஆவது ஓவரில் அவுட் ஆனார். 11 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 123 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக யசஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.
பதிநான்காவது ஆட்டம் குஜராத் vs டெல்லி – டெல்லி – ஏப்ரல் 8
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (12 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் 70 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), வாஷிங்க்டன் சுந்தர் (32 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கே. எல். ராகுல் (52 பந்துகளில் 92 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மட்டும் ஆட்டமிழக்காமல் 41 ரன் (20 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார். ஆயினும் 19.5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க அவர் தவறினார். கடைசி பந்தில் சிக்சர் அடிக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓட முயல மறுமுனை மட்டையாளர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார். அதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
பதினைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs லக்னோ – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 9
எப்போதும் அதிரடியாக ஆடும் கொல்கொத்தா நைட் ரைடர் அணியின் ஆட்டக்காரர்கள் இன்று லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆட முடியவில்லை. இருப்பினும் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 41 ரன்), ரகுவன்ஷி (33 பந்துகளில் 45 ரன்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன்), ரோமன் போவெல் (24 பந்துகளில் 39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியின் வீரர்களும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை. அந்த அணி 12 ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி நாலு முக்கியமான வீரர்களான மிட்சல் மார்ஷ் (15 ரன்), மர்க்ரம் (22 ரன்), ரிஷப் பந்த் (10 ரன்), நிக்கோலஸ் பூரன் (13 ரன்) ஆகியோரை இழந்து விட்டது. ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 54 ரன்) மற்றும் முகுல் சவுத்ரி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்) எடுத்தனர். கடைசி ஓவரில் 14 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகுல் சவுத்ரி இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றிக்கு வழிகோலினார். இதனால் லக்னோ அணி வெற்றிபெற்றது.
பதினாறாவது ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – கௌஹாத்தி – ஏப்ரல் 10
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 10.5 ரன் ரேட்டில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. அந்த அணியின் விராட் கோலி (16 பந்துகளில் 32 ரன்), படிக்கல் (7 பந்துகளில் 14 ரன்), ரஜத் படிதர் (40 பந்துகளில் 63 ரன்), ஷெப்பர்ட் (11 பந்துகளில் 22 ரன்), வெங்கடேஷ் ஐயர் (15 பந்துகளில் 29 ரன்) ஆகியோர் சுமாராக ஆடினர். ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி (26 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (43 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாக விளையாடினர். இதனால் 18 ஓவர்களிலேயே 4 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.




