தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு செல்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார்களே இதற்கு காரணம்.
முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ய விரும்புவோர் ரூ. 4,500 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும். அதுவும் முதற்கட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்தால், அவர்கள் ரூ.1,500க்கு மேல் செலுத்த தேவையில்லை. மாறாக பாசிட்டிவ் என வந்தால் அதனை உறுதிப்படுத்த 2ம் கட்ட சோதனை நடக்கும்.
அதற்கு கூடுதலாக ரூ. 3000 செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறியின் பேரில் சிகிச்சைக்கு செல்வோருக்கு தனியார் ஆய்வகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
அதற்கு அரசின் சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.2,500 வீதம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 34 அரசு ஆய்வகங்கள்,14 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை அரசு தரப்பில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதற்கான தொகை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.