தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை வல்லம் கிராமத்தைச் சார்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சுடலை. இவரின் மனைவி சத்யா. இவர்கள் இருவருக்கும் 8 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த புதன்கிழமை தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகிய அனைவரும் தென்காசிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறுமி மட்டும் தனது தாத்தாவின் வீட்டில் தனியாக இருந்த நிலையில், உள்ளூரை சார்ந்த திருடன் முத்துக்குமார் என்பவனுக்கு பால்ராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாத செய்தி தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளான்.
ஆனால், வீட்டில் சிறுமி இருந்த நிலையில், முத்துக்குமார் திருட வந்திருப்பதை அறிந்து சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் சிறுமியை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி விட்டு, வீட்டிற்கு தீவைத்து விட்டு கிடைத்த பொருட்களை திருடி தப்பி சென்றுள்ளான்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்த தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற செங்கோட்டை காவல்துறையினர், தனிப்படை அமைத்து முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது