
இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்காக வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுள் ஒன்று UPI (Unified Payment Interface).
இந்தியாவில் ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் UPI மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவில் ப்யூச்சர் போனை (Feature Phone) எனும் கீபேட் கொண்ட போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில்லேயே இருக்கிறது.
இந்தியாவில் 74 கோடி பேர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் அதே நேரத்தில் 44 கோடி பேர் ப்யூச்சர் போனையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ப்யூச்சர் போன் பயன்படுத்தும் மக்களுக்கும் UPI பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் UPI மூலம் ஆஃப்லைன் பேமண்ட் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது NPCI (National Payments Corporation of India).
UPI முறையாக இயங்க ஸ்மார்ட் போன் மற்றும் வங்கிக் கணக்கு மட்டுமின்றி சரியான இணைய இணைப்பும் அவசியம். இந்தியாவில் 59 சதவிகிதம் மக்கள் இன்னும் இணைய வசதியைப் பயன்படுத்தவில்லை.
இதனால், இணைய இணைப்பு இல்லாத ஃபீச்சர் போன்களில் UPI Lite வசதி மூலம் பணப்பரிவர்த்தனை வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சோதனைகளை நடத்தத் தொடங்கியிருக்கிறது NPCI.
முதற்கட்டமாக இந்த UPI Lite மூலம் கிராமப்புறங்களில் 200 ரூபாய்க்கும் குறைவான பணப் பரிவர்த்தனையை ஜனவரி 5 முதல் சோதனை முறையில் நடத்திப் பார்க்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.
சிம் ஓவர்லே (Sim Overlay) மற்றும் OTA (Over-The-Air) அப்டேட் என இரண்டு வழிமுறைகள் மூலம் இணைய வசதி இல்லாத இடங்கள் மற்றும் இணைய வசதி இல்லாத ஃபீச்சர் போன்களில் ஆஃப்லைன் பேமண்ட்களை சாத்தியப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
சிம் ஓவர்லே வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள் NPCI சர்வர்களுக்குச் சென்று அங்கிருந்து வழக்கமான UPI பணப்பரிவர்த்தனை போலச் செயல்படும்.
இவையனைத்தும் இணைய இணைப்பு இல்லாமல், நாம் மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பும் செயல்முறை போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை வழிமுறைகள் மூலம் இந்தியாவில் மொபைல் இணைப்புடன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யாராலும் UPI வழி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




