சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
106. ராஜ வைத்தியர்!
ஸ்லோகம்:
ஹேதௌ லிங்கே ப்ரசமனே ரோகாணாமபுனர்பவே |
ஞானம் சதுர்விதம் யஸ்ய ஸ ராஜார்ஹோ பிஷக்தம: ||
- சரக சம்ஹிதை (1-9-19)
பொருள்:
நோய்க்கு அடிப்படைக் காரணம், நோயின் இயல்பு, நோய் நீக்கும் உபாயம், நோய் திரும்ப வராத வழிமுறை இவை அனைத்தையும் நன்கு அறிந்தவரே அரச மருத்துவராக இருப்பதற்கு தகுதியானவர்.
விளக்கம்:
கண்ணால் பார்ப்பது, தொட்டுப் பார்ப்பது, கேள்வி கேட்பது இவற்றின் மூலம் நோயாளியின் நோய் என்னவென்று அறிந்து சிகிச்சை செய்யும் சிறந்த மருத்துவருக்கு இருக்கவேண்டிய குணங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.
“உடல் நோயின் மூல காரணத்தை கண்டறிவது அவசியம். அதேபோல் அறியாமை, ஏழ்மை, தீண்டாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றுக்கும் சிகிச்சை செய்ய வேண்டும்” என்றார் சுவாமி விவேகானந்தர். சமுதாய நலனுக்கு இவை தேவை.
சமுதாயத்தைப் பீடிக்கும் நோய்களின் காரணத்தைக் கண்டறிந்து, அவற்றின் இயல்புகளை ஆராய்ந்து, அவற்றை அடியோடு களைவதற்குத் தேவையான ஔஷதங்களை அளித்து, அந்த நோய் திரும்ப தலைதூக்காமல் செய்யும் சமுதாய மருத்துவரே வைத்தியர்களுள் அரசன் ஆவார்.
ஆபிரகாம் லிங்கன், சுவாமி விவேகானந்தர், டாக்டர் ஹெட்கேவார் போன்ற சான்றோர் சமுதாய நோய்களை சரியாக அடையாளம் கண்டு சிகிச்சை அளித்த ராஜ வைத்தியர்கள்.
சமுதாயத்தைப் பீடிக்கும் நோய்களுக்கான காரணம், இயல்பு, நிவாரணம் இவை குறித்த சரியான புரிதல் இல்லாத போலி சீர்திருத்தவாதிகள் சமுதாய நலம் விரும்பிகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் சமுதாய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதில் மேலும் அவற்றைப் பெரிதுபடுத்தும் அறியாமையை மக்களிடம் வளர்க்கிறார்கள். இவர்கள் போலி மருத்துவர் போன்றவர்களே!
நாட்டுப்பற்றோடும் சமரச கண்ணோட்டத்தோடும் சமுதாய நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண உழைப்பவர்களே ராஜ வைத்தியர் போன்றோர்! இப்படிப்பட்டவர்களே நமக்கு ஆதர்சம்!