மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அம்பை வனக்கோட்ட பகுதியில் பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை என்பதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
இதே போல் காரையாறு அகஸ்தியர் அருவியிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இன்று மாவட்டத்தில் மழை வெகுவாக குறைந்தது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இன்று விடுமுறை தினம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அதிகளவில் வந்தனர். மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளும் காத்திருந்து அருவிகளில் குளித்து சென்றனர்.சீசனால் கேரளாவில் உள்ள ஆரியங்காவு பாலருவி அச்சன் கோயில் மணலாறு இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.






