
Dr. B.R.J. கண்ணன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ள நானும் என் துணைவியாரும் சென்றோம். அதற்கு முன்பு முருகனின் முதல் படைவீட்டை தரிசித்துவிடலாம் என்று திட்டமிட்டோம். பசுமலையைத் தாண்டி இரயில்த்தடத்திற்கு மேல் செல்லும் பாலத்தில் ஏறி இறங்கியவுடன் கோவிலின் தோரண வளைவைச் சென்றடைந்த பொழுது காலை 8:00 மணி. அப்பொழுதே நல்ல கூட்டம். வண்டிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. போலீசார் மைக்கில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.
“இங்கே திரும்பாதீங்க. நேராப் போயி தெப்பக்குளம் பார்க்கிங்குப் போங்க.”
நாங்கள் அப்படியே கிரிவலப் பாதையைச் சுற்றி வந்து சரவணப் பொய்கை அருகில் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை அமர்த்தினோம். அங்கிருந்து நடந்து கோவிலுக்கு சென்றடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டமோ கூட்டம்.
“ஏங்க. உள்ள போனா பிழிஞ்சிருவாங்க போலயே.”
பொதுவாகவே கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசேஷம் ஏதும் இல்லாத சாதாரண நாளைத் தேர்ந்தெடுத்து அமைதியாகக் கடவுளைக் கண்டு தியானித்து வரவேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். இத்தனை மக்களின் இரைச்சலில், உடன் கோவில் பணியாளர்களின் அதட்டல்கள் சேர நாடி வந்த மன அமைதி கிடைக்குமா என்ன?
“ஆமாமாம். கல்யாணம் பத்தரை மணிக்குத்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. என்ன செய்யலாம்?”
“இங்கே பக்கத்தில சோமப்பர் ஜீவசமாதி ஒன்னு இருக்கு. ரொம்ப அழகான இடம். நாம அங்கே போய் அமைதியா தியானம் செஞ்சுட்டு வரலாம்.”
சித்தர்கள் தங்கள் உயிர் பிரிவதை முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள், அறிவித்தும் விடுவார்கள். அவர்களுக்கு சமாதி கட்டப்படும். அதில் அமர்ந்தபடியே உயிர் துறப்பார்கள். அதன் மேல் கோவில் கட்டி ஏதேனும் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அங்கு வரும் பக்தர்களுக்கு சித்தர்கள் சூட்சுமமாய் அருள் பாலிப்பதாக நம்பப்படுகிறது. இது போன்ற இடத்திற்குச் செல்லும்பொழுது
நேர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதாகவும், பிரச்சனைகளுக்குத் தீர்வும் கிடைப்பதாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அலைபேசியை உயிர்ப்பித்தேன். Mapplsல் தேடினேன். உடனே அது காண்பித்து விட்டது. வண்டியில் சென்றால் 8 நிமிடங்கள் ஆகும் என்றும் நடந்து சென்றால் 22 நிமிடங்கள் ஆகும் என்றும் சொல்லியது.
“நமக்குத்தான் நேரம் இருக்குல்ல. நடந்தே போவோம்.”
“கொஞ்சம் மலையில ஏறணும். அக்சுவலா கோவில் வாசல் வரை வண்டி போறதுக்கு தார் ரோடே இருக்கு.”
“பரவால்ல நடந்து போவோம். வா. “
“இன்னைக்கு பண்ண வேண்டிய நடைப் பயிற்சியை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க. இனி நான் உங்களை மாத்த முடியாது. வாங்க நடப்போம்” என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.
தோரண வளைவில் நுழையாமல், பாலத்தை ஒட்டி இடது புறத்தில் பயணித்தால் அருள்மிகு சோமப்ப சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம்.
இந்த இடம் திருக்கூடல் மலை எனப்படுகிறது. அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கிருந்து மேலே செல்ல வண்டிகளுக்கான தார் சாலையும் நடந்து செல்ல மற்றொரு பாதையும் இருந்தன. இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தினார்.
“வணக்கம் சார்.”
தான் ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி என்றும் என்னை முன்பு சந்தித்துள்ளதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். (மன்னிக்கவும், பெயரை மறந்து விட்டேன்)
“நான் அடிக்கடி வருவேன் சார். உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். மேலே முருகன் கோவிலும் பெருமாள் கோயிலும்கூட இருக்கு. “
இந்த விஷயத்தை என் மனைவி அறிந்திருக்கவில்லை.
நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு பிரமாண்ட அனுமாரைக் கண்டோம். வெகு விரைவில் கோவிலையும் அடைந்து விட்டோம். எங்களைத் தவிர்த்து இரண்டே பேர் இருந்தனர்.
சோமப்ப சித்தரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது அவர் எல்லோரையும் ‘சோமப்பா சோமப்பா’ என்று அழைத்ததால் அவரை சோமப்பசுவாமி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனராம். இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பக்தர்களின் நோய் நொடிகளுக்கு சோமப்பர் நல்ல தீர்வுகளைத் தருவதாக நம்பிக்கை.
அங்கிருந்த லிங்கத்தை வழிபட்டு, கோவிலைச் சுற்றி விட்டு, சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டோம்.
பின்னர் கோவிலின் பின்புறமாக அமைந்துள்ள படிகளில் ஏற ஆரம்பித்தோம். சரிவுப் பாதை மற்றும் படிகளான பாதை என்று இரு பிரிவுகளாகவும் இடையில் பிடித்து நடந்து செல்ல இரும்புக் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூரம் சிறிது என்றாலும் பாதை செங்குத்தாக மேல் ஏறியதால் சற்று மூச்சு வாங்கியது. மூட்டு வலி உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சற்று சிரமம்தான். ஏற ஏற சுற்றிலும் நம் மதுரை நகரை நாம் பார்க்கும் விட்டம் விரிய விரிய, காட்சிகளை ரசித்துக்கொண்டே நடந்தோம். அப்பாடா கோவில்கள் தெரிந்துவிட்டன. அந்த குன்றின் உச்சியில் ஒருபுறம் முருகன் கோவிலும் மறுபுறம் பெருமாள் மற்றும் சிவன் கோவிலும் உள்ளன. சமீபத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால் கோபுரங்கள் பளபளவென பிரகாசமாக இருந்தன.
படிகளில் சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.
ஆஹா என்ன ஒரு அமைதியான அழகான இடம். நான்கு பக்கங்களிலும் திறந்த வெளியான செவ்வக வடிவிலான ஒரு மண்டபம் அது. ஒரு பக்கத்தில் முருகனின் கருவறை. சிலு சிலுவென காற்றடிக்க கீழே வீடுகள், வயல்வெளிகள், பாலங்கள், ஏரி, தூரத்தில் யானைமலை என்று எல்லாமும் கண்முன் விரியப் பரவசமாக இருந்தது.
அழகான நீண்ட மயிலைக் கண்டுவிட்டு எதிரே இருந்த முருகனை தரிசிக்கலானோம். பழனியில் நாம் காணும் அதே உருவம். நெஞ்சுப் பகுதியும் முகமும் திருநீறால் நிறைந்திருந்தது. அதை மீறி எங்களைக் கண்டு புன்னகைத்தான் முருகன். பதிகம் பாடி பூசாரி தீபத்தைக் காட்ட சிலிர்த்துடன் வணங்கினோம். பின்னர் அவர் சொன்னார்,
“இந்த இடம் போகர் தவம் செய்த இடம். இந்த மூர்த்தி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது. இதனை ஏற்பாடு செய்தவர் மாயாண்டிச் சித்தர். இந்த இடத்தைத் தென்பழனி என்று சொல்வார்கள்.”
மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து அமைதியாகத் திருப்புகழ் அல்லது கந்தர் சஷ்டி கவசம் பாடிவிட்டு இந்த அழகனை தரிசித்துவிட்டுச் சென்றால் மனம் அமைதியடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இரண்டு கோயில்களுக்கும் அவரே பொறுப்பாளர். ஆகையால் எங்களை அழைத்துக் கொண்டு அடுத்த கோவிலுக்குச் சென்றார். அங்கு வடக்குநோக்கியிருந்த சயனப்பெருமாளைத் தரிசித்தோம். பெரும்பாலான இடங்களில் பெருமாள் நின்று கொண்டோ அமர்ந்துகொண்டோதான் இருப்பார். பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளைப் பார்த்தவுடன் மறுபடியும் சிலிர்ப்பு ஏற்பட்டது.
“இங்கே பெருமாள் படுத்திருக்கார். கண் மூடலை. மேல ஆகாசத்தப் பார்த்தபடி இருக்கார். திருவனந்தபுரத்தில இருக்கிற பத்மநாபசுவாமியின் சிறிய வடிவம் தான் இது”
அங்கேயே மற்றொரு கருவறையில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.
“மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது” என்றார் பூசாரி.
இந்தக் கருவறையின் பின்புறம் சென்றால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இடையில் திருப்பரங்குன்ற கோவிலின் பிரதான கோபுரம் தெரிகிறது. செப்பனிடும் பணி நடைபெறுவதால் அது பச்சை ஆடை போர்த்தப்பட்டு இருந்தது.
திரும்பி இறக்கத்தில் நடப்பது எளிதாக இருந்தது. ஆனால் பாதை வளைந்து வளைந்து செல்வதால் கவனம் தேவை. குழந்தைகளுடன் சென்றால் அவர்களைத் தனியாக விடாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்குவது பாதுகாப்பானது.
“ஏங்க. நம்மள மதுரைக்காரங்கன்னு சொல்லிக்கிறோம். இப்படி ஒன்னு இருக்குன்னு இது வர தெரியாமலேயே இருந்துட்டோமே. “
“இப்பத் தெரிஞ்சுகிட்டோம்ல. சந்தோஷப்படுவோம்.”
ஆக ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற நாங்கள் மனம் நிறைந்துத் திரும்பினோம்.
பி.கு. இந்த இடத்தைப் பற்றி நான் வலைதளத்தில் தேடிய பொழுது, ஹலோ எஃப்எம் டைரி செல்வா அவர்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்த ஒரு காணொளியைக் காண நேரிட்டது





