கொழும்பு:
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர் என்று ஓய்வு பெற்ற இலங்கை ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழ்ந்து தள்ளியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் கமால் குணரத்ன. இவர் இலங்கை ராணுவத்தில் இருந்து கடந்த 5ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும் கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். அல்கொய்தாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை அறிமுகப்படுத்தினார். இவரிடம் 200 தற்கொலைப் படையினர் இருந்தனர்.
தற்கொலைப் படையினரில் பெரும்பாலானோர் பெண்கள்தான். இதுவரை விடுதலைப் புலிகள் தொடர்பாக 10,000 புகைப்படங்கள் கைப்பற்றியிருக்கிறோம். ஆனால் எந்த படத்திலும் அவர் மது அருந்துவது போல் இல்லை. பாணு, ரத்னம் மாஸ்டர், சூசை என சிறப்பான தளபதிகள் அவரிடம் இருந்தனர்..
– என்று கூறியுள்ளார்.