
வெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இதை அடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணி 348 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மீண்டும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் மட்டுமே அரைசதம் கடந்து, அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள், 10 பந்துகளில் அந்த இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து அணி வெற்றிக்கு வித்திட்ட டிம் சவூதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.