கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல் கட்ட சோதனை நடத்தப் பட்டுள்ளதாகவும், அது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாகவும் சீனா தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்… கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா ஈடுபட்டுள்ளது என்றும், அந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை எவர் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் என்றும், சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது என்று கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, 108 தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களை 3 குழுக்களாகப் பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தின் மூலம், அவர்களது உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் உணரப்படவில்லை; அது, இந்தத் தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தத் தடுப்பு மருந்து, சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. இதற்கு Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையின் வெற்றி, அடுத்தக்கட்ட சோதனைகளை தொடர வழி செய்துள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்தக்கட்ட சோதனைக்கு 508 தன்னார்வலர்களை இந்தத் தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபடுத்த சீனா அனுமதி அளித்திருக்கிறது. ShaCoVacc, PiCoVacc என இரண்டு தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோனை செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது.