நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளின் வலுவான கூட்டணி, ஒற்றுமை அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ஒன்றிணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 9ஆவது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மூன்று நாள் பயணமாக சீனா சென்றார். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்துப் பேசினார். இன்று பிரிக்ஸ் மாநாடு துவங்கியதும், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மாநாட்டின் தொடக்க விழாவில் மோடி பேசுகையில், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம். பிரிக்ஸ் நாடுகளில் உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வளர்ச்சி வங்கி கடன்களை வழங்கி வருகிறது.
வறுமையை ஒழிப்பதற்கு, சுகாதாரத்தை உறுதி செய்வதற்கு, சுத்தம், திறன், உணவு. பாதுகாப்பு, ஆண்-பெண் சமத்துவம், மின்சாரம், கல்வி ஆகியவற்றை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறோம். பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை மற்றும் பன்முக தன்மை நிச்சயம் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
சோலார் மின் திட்டத்தை வலிமைப்படுத்த ஐஎஸ்ஏ.,வுடன் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.
பிரிக்ஸ் நட்புறவு கண்டுபிடிப்புக்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது. திறன் மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, தொடர்புகள் ஆகியவற்றில் பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா வரவேற்கிறது என்றார்.