ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது

Published:

ISIS வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது பெரும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால், ஆயுத ரீதியான நேரடி போர்த் தந்திரங்களைக் காட்டிலும் இப்போது ஒபாமா நிர்வாகம் பெரும் சிக்கலில் திளைப்பது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் தீவிர பிரசாரம்தான். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வலைத்தளங்கள் மூலம் தீவிர பிரசாரத்தை உலகம் முழுவதும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகள் அதி தீவிரமாக உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் டிவிட்கள் அவர்களால் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அளவுக்கு மிக அதிக டிவிட்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் தனித்தனியாக கண்காணித்து அவர்களின் செயல்பாடுகளை ஆராய்வது மிக கடினமான பணி என்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பினர். ஈராக்கில் அதிக தீவிரத்துடன் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினர், சிரியாவில் தங்கள் கைகளை ஓரளவு விரிவாக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் சமூக தளங்கள், மற்றும் இணைய வெளியில் கண்காணிக்க செண்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் கவுண்டர் டெரரிசம் கம்யூனிகேஷன் என்ற ஒரு நிறுவனத்தை அமெரிக்க அமைப்பு நிறுவத் தீர்மானித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ.எல். என்ற பெயர்களில் இயங்கி வருவதும், அவர்களின் இலக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என்பதும், அமெரிக்க அரசால் கூட நெருங்கி நம்பிக்கை ஏற்படுத்த முடியாத இத்தகையவர்களிடம் தனது பிரசாரம் மூலம் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் நெருங்குவதும் இப்போது இந்த அமைப்பால் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

Related articles

Recent articles

spot_img