
இந்திய இணையதளங்களை பதிவு செய்து அவற்றின் மூலம் ஊடுருவும் சீனர்கள், இப்போது இந்தியர்களின் தகவல்களை திருடுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன.. அந்த செயலிகளின் சர்வர் சீனாவில் இருப்பதும், சீன அரசின் கொள்கைப்படி தாங்கள் கேட்கும் நேரத்தில் வாடிக்கையாளரின் அனைத்துத் தரவுகளையும் பார்க்கும் உரிமை அரசுக்கு உண்டு என்றும் இருப்பதால், மத்திய அரசு அவற்றை அப்போது தடைசெய்தது.
சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த வருடம் தடை விதித்தது. இதனால் சீனாவைச் சேர்ந்த, ‘சைபர்’ மோசடி பேர்வழிகள், ‘டாட் இன்’ என்ற இந்திய இணையதளங்களை வாங்கி, அதன் வாயிலாக நம் தகவல்களை திருடும் விஷயம் அம்பலமாகி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதை அடுத்து அவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தகவல் திருட்டு வாயிலாக பல்வேறு பொருளாதார மோசடிகளும் அரங்கேறின. இதையடுத்து, சீன இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்புகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் அதிக கால தாமதமாவதை தடுக்க சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடி பேர்வழிகள் குறுக்கு வழியில் ஊடுருவி வருகின்றனர்.
தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, கடந்த மே மாதம் தங்கள் வழக்கமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்குரிய சில சீன சைபர் மோசடி நிறுவனங்கள் நான்கு நாட்களில் 2,000 இணையதளங்களை நம் நாட்டில் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்தியாவில் பதிவு பெறும் இணைய தளங்கள் ‘டாட் இன்’ என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளன. இந்த டாட் இன் இணையதளங்களைப் பதிவு செய்வதன் வாயிலாக, தங்களை இந்திய நிறுவனங்களைப் போல அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும்பாலும் போர்னோகிராபி எனப்படும் பாலியல் இச்சைகளை துாண்டும் இணையதளங்கள் மற்றும் சூதாட்டத் தளங்களாக இந்தியாவில் செயல்பட்டு, இந்தியர்களின் பணத்தைச் சுருட்டும் தளங்களாக மாறியுள்ளன.
இந்த இணையதளங்களை கணினிகளிலோ, மொபைல் போன் செயலி வாயிலாகவோ பயன்படுத்தும் போது, பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை அந்நிறுவனம் திருடுகிறது. அதன் வாயிலாக, பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட முறைகேடுகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., மொபைல் போன்களில் இந்த திருட்டுகள் நடந்துள்ளன. இதையடுத்து, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நம் இணையதளங்களை சட்டவிரோதமாக வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.