
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் நினைவகத்தின் தொடர்ச்சியாக கடலில் ரூ.81 கோடி செலவில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக., அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை அடுத்து கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் மக்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகச் சொல்லி பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தீர்மானமானது.
எனினும் இதற்கு மத்திய அரசின் துறைகளில் அனுமதி பெறப்பட வேண்டியிருந்தது. இதற்காக, ஒரு நிபுணர் மதிப்பீட்டுக்குழு, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் சில பரிந்துரைகள் அளித்தன. இந்நிலையில் 15 நிபந்தனைகளுடன் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் விதித்த நிபந்தனைகள்:
கட்டுமானம் தொடங்குவதற்கு முன், சின்னம் அமைய உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது.
மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை வழங்க வேண்டும்.
அவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை மண்டல சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலையும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக் கடிதம் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.
ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் – என்று அந்த அனுமதிக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.