பெல்ஜியம் நாட்டில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நாடு முழுவதும் போலீஸார் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசு வழக்குரைஞரின் செய்தித் தொடர்பாளர் கூறியது… வேர்வியேர்ஸ் நகர சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, வேர்வியேர்ஸ், பிரஸல்ஸ் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புள்ளதாக 5 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிபந்தனைகளுக்குள்பட்டு இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரைக் குறி வைத்துப் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். வேர்வியேர்ஸ் போலீஸ் நடவடிக்கையில் பிடிபட்ட நபர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸ் நடவடிக்கைகளையடுத்து, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பிரான்ஸ் சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைக் கைது செய்து பெல்ஜியம் அழைத்து வர, நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது

