கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜிப் ரஸாக்கின் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்தக் கூட்டணி நடத்தி வந்த 60 ஆண்டு கால ஆட்சி, 92 வயது மகாதீர் மொஹம்மத் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் எழுச்சியால் முடிவுக்கு வந்தது.
புதிய பிரதமராக மகாதீர் மொஹம்மத் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்க மன்னர் முன்வந்துள்ளார்.
இந்நிலையில் அரசின் கஜானாவில் இருந்து 700 மில்லியன் டாலரை முறைகேடாக தன் கணக்கில் சேர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, நஜிப் ரஸாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது புதிய அரசு.
இது குறித்து நஜிப் ரஸாக் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தபோது “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Saya telah dimaklumkan bahawa Jabatan Imigresen Malaysia tidak membenarkan saya dan keluarga ke luar negara. Saya menghormati arahan tersebut dan akan bersama keluarga dalam negara.
— Mohd Najib Tun Razak (@NajibRazak) May 12, 2018
எதற்காக இந்தத் தடை என அவர் எதுவும் குறிப்பிடவில்லை. என்றாலும், இந்த உத்தரவின்படி நடந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் நஜீப் ரஸாக். தேர்தல் தோல்வியை அடுத்து, தான் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணித் தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.