மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
மாலத்தீவு அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவருமான இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார்.
மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சி தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் சார்பில் நிறுத்திய வேட்பாளர் இப்ராகிம் முகமது சொலிஹ்ஹுக்கும் கடும் போட்டி நிலவியது.
தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிஹ், 58 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
முன்னதாக, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் வெற்றி பெறுவார் என்று கூறப் பட்டது. அவருக்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அப்துல்லா யாமீனால், மாலத் தீவில் கடும் அரசியல் குழப்பங்களும், நெருக்கடிகளும் நிலவின. அடக்குமுறைகளை அதிபர் கட்டவிழ்த்து விட்டார் என்று மக்கள் கருதினர். இதனிடையே, தேர்தல் முடிவுக்கு மதிப்பளித்து சுமுகமான அதிகார மாற்றத்தை அப்துல்லா யாமீன் உறுதிப்படுத்த வேண்டும் என்று வெற்றி பெற்றுள்ள இப்ராகிம் முகமது கேட்டுக்கொண்டார்.
மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவு ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள இந்தியா, வெற்றிபெற்ற வேட்பாளர் இப்ராகிம் முகமதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.