“சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேன கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மைத்ரீபால சிறீசேன, அங்கு வாழும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது என்று குறிப்பிட்டார். மேலும், அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களை நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாக மைத்ரீபால சிறீசேன கூறினார்.
விடுதலைப் புலிகளின் வான்வெளித் தாக்குதலுக்கு அஞ்சியே முன்னாள் அதிபர் ராஜபட்ச, முன்னாள் பிரதமர், ராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அந் நிலையில் இறுதிப் போரை முடித்து வைத்தது தான்தான் என மைத்ரீபால சிறீசேன பேசியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.



