காத்மாண்டு: நேபாளத்தில் பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய போதிய தகன மேடை வசதி இல்லை என்பதால், எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக உடல்களை தகனம் செய்து வருகின்றனர். நேபாளத்தில் புகழ் பெற்ற பசுபதிநாதர் கோவில் அருகே அமைந்துள்ள தகன மையத்தில் ஏற்பட்டுள்ள கடும் இட நெருக்கடி காரணமாக அந்த தகன மையத்துக்கு வெளியே கிடைத்த இடத்தில் எல்லாம் உரிய இறுதிச் சடங்குகள் கூட முறையாக செய்யப் படாமல், தகனம் செய்து வருகின்றனர். நேற்று அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் தகனம் செய்யப்பட்டன. பல தகன மையங்களில் உடல்களை எரியூட்டுவதற்காக உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

