ஆப்ரேஷன் நடக்கும்போது நெருப்பு பிடித்து கன்சர் நோயாளி மரணம் அடைந்துள்ளார். அதிர்ச்சிகரமான இந்த விபத்து, ருமேனியாவில் உள்ள புசாரெஸ்டில் ப்ளோரெஸ்கே மருத்துவமனையில் நடந்தது.
66 வயது பெண்மணி கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
டிசம்பர் 22ஆம் தேதி ஆபரேஷனுக்கு முன் பாக்டீரியா நுண்ணுயிர்களை அழிப்பதற்காக மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு ஒரு டிசின்பெக்டன்ட் ஸ்பிரே அளித்தார்கள். அதில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்ததால் ஒரு மின்சார உபகரணம் அவர் மேல் பட்டதும் உடலில் நெருப்பு பிடித்துக் கொண்டது. 40% நெருப்பு காயத்தால் உடல் எரிந்து போனது. சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் நோயாளி இறந்து போனார்.
அவர் மரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
“ஆப்ரேஷன் தியேட்டரில் என்ன நடந்தது என்றோ அதன் விபரீதம் என்ன என்றோ எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அது ஒரு விபத்து என்று மட்டுமே கூறினார்கள்” என்று மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
“மீடியா மூலமாகவே எங்களுக்கு சில விவரங்கள் தெரிய வந்தன. யார் மீதும் தவறு கண்டு பிடிப்பதற்காக அல்ல….. என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரிய வேண்டுமல்லவா?” என்றனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் போவதாக ருமேனியா மருத்துவத் துறை அமைச்சர் விக்டர் கோஸ்டாசே தெரிவித்தார்.
மின்சார உபகரணங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ஆல்கஹால் உள்ள டிசின்பெக்டன்ட் பயன்படுத்தக்கூடாது என்ற விஷயம் டாக்டர்களுக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்று இணை அமைச்சர் ஹோராதியு மோல்டோவன் கூறினார்.
யுரோப்பியன் யூனியன் நாடுகளோடு ஒப்பிட்டால் மருத்துவத் துறையில் ருமேனியா பிற நாடுகளை விட குறைந்த அளவு தொகையை செலவழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.