
தீபாவளி – தமிழர் பண்டிகையா?
ஆசிரியர் மாணவர் உரையாடல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?
ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய் எனப் புரியவில்லை. இருந்தாலும். தீபாவளி இந்திய நாட்டில் வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது. நாம் தீபாவலி கொண்டாடுவதில் என்ன சந்தேகம் வந்தது.
மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.
ஆசிரியர்: அதனால் என்ன? சங்க காலத்தில் நாம் பீட்சா, பர்கர் தின்றதாகக்கூட செய்தி இருக்காது. இப்போது சாப்பிடவில்லையா? சங்க காலத்தில் ஆண்கள் பேண்ட் அணிந்ததாகவோ, பெண்கள் ஜீன்ஸ் அணிந்ததாகவோ கூட செய்தி இருக்காது. இப்போது அணியவில்லையா? சங்க இலக்கியத்தில் சொல்லவில்லை என்பதற்காக நாம் அந்த உணவுகளையோ, ஆடைகளையோ தவிர்க்கிறோமா?
மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?
ஆசிரியர்: நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கிறிஸ்மஸ் கொண்டாடியதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மிலாடி நபி கொண்டாடியதில்லை. ஆனால் இன்று கொண்டாடிவருகிறோம். அதைப் போலத்தான் இதுவும்.
மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?! அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

ஆசிரியர்: இது இந்துக்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று கூறும் ஒரு பிரிவினரால் ஏற்பட்ட குழப்பம்.
மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபி
முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?
ஆசிரியர்: தீபாவளி – தீமை அழிந்து அமைதி பிறந்த நாள்.
மாணவி : நரகாசிரன் இறந்தநாள் என்று சொல்கிறார்களே. மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?
ஆசிரியர்: இதுகூட இந்து மதத்தை, இந்தியாவில் பல காலமாக மக்களிடம் இருந்து வரும் மதத்தைக் குறைகூற எழுந்த வாதம். நரகாசுரன் இறந்த நாள் அல்ல. தீமை அழிந்து அமைதி பிறந்த நாள்; இருள் அழிந்து ஒளி பிறந்த நாள்; ஒவ்வொரு வீட்டிலி, மகிழ்ச்சி நிலவும் நாள்.பெண்களுக்கு பாதுகாப்பை உண்டாக்கிய நாள்.
மாணவி: பெண்களுக்குப் பாதுகாப்பா? யாரால் ஏற்பட்டது?
ஆசிரியர்: ஸ்ரீ கிருஷ்ணரால்.
மாணவி: ஸ்ரீ கிருஷ்ணர் வட நாட்டைச் சேர்ந்தவர் அல்லவா? அவரே 16008 பெண்களைத் திருமணம் புரிந்துகொண்டார் எனச் சொல்கிறார்கள். அவர் எப்படி பெண்களைப் பாதுகாத்திருக்க முடியும்.
ஆசிரியர்: நரகாசுரன், 16000 பெண்களைச் சிறை பிடித்து வைத்திருந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களைக் காப்பாற்றினார். அதனால்தான் பெண்களின் பாதுகாப்பு பற்றிய தினம் எனச் சொன்னேன்.
மாணவி: ஆனால் நரகாசுரன் என்ற தமிழனை கிருஷ்ணர் என்ற ஆரியர் கொன்ற தினம்தானே இந்த நாள்.
ஆசிரியர்: ஆரியர், திராவிடர் கொள்கையே தவறானது என்று பல ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் இன்னும் ஆரியர் திராவிடர் பிரிவினை பற்றி பேசுகிறோம் என்பது நமது வரலாற்று அறிவின் ஆழத்தை விளக்குகிறது. அது போகட்டும். நரகாசுரன் அசாம் பகுதியை ஆண்ட ஒரு அரசன் என்று புராணங்கள் கூறுகின்றன. அவன் எப்படி தமிழனாவான்?
மாணவி: அப்படியானால் கிருஷ்ணர் யார்? அவர் வடநாட்டு அரசர் இல்லையா?
ஆசிரியர்: தொல்காப்பியத்தில் வரும் “மாயோன் மேய காடுறை உலகம்” என்பதில் வரும் மாயோன் திருமால்தான். அகநானூறு, புறநானூற்றில் இராமரைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சிலப்பதிகாரம் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பூம்புகாரில் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது. இப்போது சொல் கிருஷ்ணர் வடநாடு அரசர் என்றால் தமிழ்ப் புலவர்கள் அவர் பெயரை ஏன் பாடல்களில் சொல்ல வேண்டும்?
மாணவி; அப்ப தீபாவளிப் பண்டிகை நம்முடைய பண்டிகைதானா?
ஆசிரியர்: ஆமாம். அதிலென்ன சந்தேகம்.




