அமித் ஷாவின் ‘அண்ணாமலை கணக்கு’!

Published:

annamalai welcome amit sha in combatore - 2026

— ஆர். வி. ஆர்

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜக ஆதரவாளர்களுக்குச் சோர்வு தரும் ஒரு தகவல் ஊடகங்களில், வாட்ஸ் அப்பில், விறுவிறுவென்று உலா வருகிறது, விவாதிக்கப் படுகிறது. அதன் இரண்டு அம்சங்கள் இவை:

1) பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறொருவர் நியமிக்கப்பட இருக்கிறார்.

2) வரப்போகும் இந்த மாற்றத்துக்கான காரணம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அண்மையில் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, ‘2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும், என்னோடு இணக்கம் கொள்ளும் வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த வேண்டும்’ என்று கேட்டாராம். அதிமுக-வுடன் கூட்டணி இல்லாமல் திமுக-வைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அமித் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்.

பாஜக-வின் தேசியத் தலைமையிலிருந்து இந்த மாறுதல், அதன் காரண காரியம், பற்றி அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வரவில்லை.

நிதானமாக யோசித்தால் இந்தச் செய்தியை, ஊடகத்தில் இது விரிவாகப் பரவுவதை, நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

2024 லோக் சபா தேர்தலுக்காக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைக்க அதிமுக-வுக்கு அவசியமில்லை என்று கருதினார் பழனிசாமி. பாஜக-வுடன் முன்பிருந்த கூட்டணி தொடர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிமுக இழக்கும், அந்த இழப்பை பாஜக-வுடனான கூட்டணி ஈடு செய்யாது என்றும் அப்போது அவர் நினைத்தார். அது போக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் செல்வாக்கு உயர்ந்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையால், அரசியலில் தனக்குள்ள மதிப்பு இன்னும் குறையும், அதிமுக-வுக்குள் தன் செல்வாக்கு குறையும் என்று தனக்காகவும் கவலைப் பட்டார் பழனிசாமி. இதனால் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக-வை விலக்கினார் பழனிசாமி. அதனால் இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் இழப்பைச் சந்தித்தன.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

இப்போது காட்சி மாறுகிறது. வரப்போகும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச பழனிசாமியை எது அமித் ஷாவிடம் கூட்டிச் சென்றது?

கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அண்ணாமலை தனது அசாத்தியத் துணிவால், திறமையால், சாதுர்யத்தால், அர்ப்பணிப்பால், தமிழகத்தில் பாஜக வுக்குச் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவு தான் – அது தொடர்ந்து அதிகரிப்பதுதான் – பழனிசாமியைப் பாஜக பக்கம் இழுக்கிறது.

முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிப் போவதற்கு முக்கிய காரணமாக எந்த அண்ணாமலை கருதப்பட்டாரோ, அதே அண்ணாமலையால் தமிழக பாஜக பெற்றிருக்கும் கூடுதலான மக்கள் சக்தி, அதிமுக-வை பாஜக பக்கம் இழுக்கிறது. அந்த இரு கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் அதிமுக-வுக்கும் நிச்சயப் பலன் உண்டு, முன்பு அதிமுக விலகிப் போனதால் தவறவிட்ட அந்தப் பலன் 2026-ல் அதிமுக-வுக்கும் கிடைக்கட்டும் என்று பழனிசாமி இப்போது நினைக்கிறார்.

ஆனால் ஒன்று. ‘போவேன், வருவேன்’ என்று போக்குக் காட்டும் பழனிசாமி கேட்டதால், அரசியலில் கூர்மதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அமித் ஷா – மோடியின் வலது கரமாக விளங்கும் ஒரு பாஜக தலைவர் – மக்கள் அபிமானம் பெற்ற துடிப்பான இளம் தலைவன் ஒருவனைத் தன் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைப்பாரா? அப்படி நடந்தால் அது கட்சியின் பல எதிர்காலத் தலைவர்களையும் பாதித்து பின்னாளில் அவர்களையும் கட்சிப் பணியில் சுணங்க வைக்கும் என்று அமித் ஷா நினைப்பாரே?

அண்ணாமலை பதவி விலகிய பிறகு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டு, மீண்டும் பழனிசாமி அந்தக் கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டுப் போனால் பழனிசாமிக்காக தமிழக பாஜக இழந்த இளம் தலைவர்களை மீண்டும் பெற முடியாது என்ற பிரக்ஞை பாஜக-வின் தலைமைக்கு இருக்கத் தானே செய்யும்?

இதையெல்லாம் மற்றவர்கள் சொல்லி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்கள் மனங்களை அறியும் அந்த இரு தலைவர்கள், கட்சியின் அடுத்த அடுத்த நிலைத் தலைவர்களின் எண்ணங்கள் பற்றியும் நன்கு அறிவார்கள்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

சரி, பிறகு யார் எதற்காக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப் படுவார் என்ற தவறான தகவலைக் கசிய விட்டிருப்பார்கள்? ஊடகத்தில் பலமாகப் பரவச் செய்திருப்பார்கள்?

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கு அண்ணாமலை நாளொரு தொல்லையும் பொழுதொரு குடைச்சலும் அரசியல் ரீதியாகக் கொடுத்து வருகிறாரோ, அந்தக் கட்சியால் சொகுசாக வாழ்கிறவர்கள் செய்த காரியமாகத்தான் இது இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

பாஜக ஆதரவாளர்கள் சோர்வடைந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைமையின் மீது பிடிப்பிழந்து, “சீச்சீ! என்ன கட்சி இது!” என்று அவர்கள் நினைக்கட்டும் என்பது பாஜக-வைத் தீவிரமாக வெறுக்கும் ஒரு கட்சியின் கணக்காக இருக்கும். அதோடு, நடப்பதைப் பார்த்து அண்ணாமலையும் வெறுப்படைந்து பதவி விலகலாம் என்பதும் அந்தக் கட்சியின் நப்பாசையாக இருக்கும். ஆனால் அமித் ஷாவும் அண்ணாமலையும் பனங்காட்டு நரிகள்.

இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த, திமுக பாணி அரசியலைக் கட்டுக்குள் வைக்க, பாஜக தீவிரமாகச் செயல்படுகிறது. அது நடந்தேற, போகிற போக்கில் பாஜக தன்னை அதிமுக-வுடன் அரசியலில் சமன் செய்துகொள்ள வேண்டும், காலப் போக்கில் அதிமுக-வை முந்தவும் வேண்டும். அப்படி இருக்கையில் அதிமுக சொல்கிற படி தமிழகத்தில் பாஜக தனது தலைவரையும் மாற்றும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

இன்னொன்று. தமிழகத்தில் அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் மக்கள் செல்வாக்கின் முக்கிய காரணம் இது. அதாவது, தீய சக்தியான திமுக-வை அண்ணாமலை நேர்மையாக, விடாப்பிடியாக எதிர்க்கிறார், அம்பலப் படுத்துகிறார். அண்ணாமலையை ஆதரிக்கும் மக்கள் அந்த எதிர்ப்பைப் பிரதானமாக வரவேற்கிறார்கள், என்பது அந்தக் காரணம். அனைவரையும் விட பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தெரியும். பிறகு ஏன் அந்த இருவரும் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து 2026 தேர்தலுக்கு முன் விடுவிக்க நினைக்க வேண்டும்?

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

‘எல்லாம் சரி. அண்ணாமலை தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார் என்பது தவறான தகவலானால், அதை அமித் ஷா உடனே மறுத்து அறிக்கை வெளியிடலாமே, அவர் ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று சிலர் கேட்கலாம்.

பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், அதுவும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியக் கட்சி, பாஜக-வின் தேசியத் தலைமை தனது உள்கட்சி விவகாரங்களில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறது, அதை செயல்படுத்தப் போகிறது, என்று ஒரு தவறான தகவலை ஊடகத்தில் பரவ விட்டால், அதை பாஜக மறுத்து அறிக்கை விட அவசியம் இல்லை. பாஜக அப்படிச் செய்ய ஆரம்பித்தால், விஷமத் தனமான எதிர்க் கட்சிகள் பாஜக தேசியத் தலைமை பற்றிப் புதிய புதிய தவறான தகவல்களை அவ்வப்போது ஊடகத்தில் பரப்பும். ஒவ்வொரு முறையும் பாஜக அவற்றை மறுத்துக் கொண்டிருக்க முடியாது. காலப் போக்கில் மக்கள் எது உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.

அமித் ஷா – பழனிசாமி – அண்ணாமலை பற்றிய இந்தப் பொய்ச் செய்தியை உருவாக்கியவர்கள், பாஜக-வுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார்கள். இந்தப் பொய்ச் செய்தி பரவியதால், அண்ணாமலையின் எண்ணற்ற ஆதரவாளர்கள் அவர்மீது மாறாத அபிமானம் உடையவர்கள் என்பது அவர்கள் பலவாறாக வெளிப்படுத்திய கவலையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அது பாஜக-வின் தேசியத் தலைமைக்கும் தெரிய வந்திருக்கும். ஒரு சிறந்த மாநிலத் தலைவரை உருவாக்கிய திருப்தியும் ஊர்ஜிதமும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீண்டும் கிடைத்திருக்கும்.

சரிதானே?

Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

Related articles

Recent articles

spot_img