சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைத எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் எடிட்டர் கிஷோர். ‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர். தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவர். இவர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை. இன்னும் கோமா நிலையிலேயே உள்ளார். மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்களாம். கிஷோருக்கு விரைவில் நினைவு திரும்பி பழைய நிலைக்கு வர திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
எடிட்டிங்கின் போது திடீர் மயக்கம்: எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் சிகிச்சை
Published:

