‘ரெம்டெசிவிர்’ அரசியலை நிறுத்துங்கள்!

Published:

remdesivir crowd 1
remdesivir crowd 1

தமிழகத்தில் நிலவும் இன்றைய தலையாய பிரச்னை – ரெம்டெசிவிர் மருந்துக்காக நடக்கும் அரசியல்தான்!

ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சி; 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை! உயிரிழந்த நோயாளிகளின் பெயரில் பரிந்துரை சீட்டு இருந்ததாக போலீசார் தகவல்; சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பு என்ற ரீதியிலான செய்திகள் தமிழகத்துக்குப் புதிதாகக்கூட இருக்கலாம்! ஆனால் நேர்மையையும் அடுத்தவருக்கு உதவும் பாரம்பரியத் தமிழின உணர்சியையும் மறந்துவிட்ட பேராசைத் தமிழனுக்கு இது எந்த வகையிலும் மனத்தை உறுத்தாத செய்திதான்!

ரெம்டெசிவர் மருந்தை சென்னையில் மட்டும் வைத்துக் கொண்டு, பலரை கார்களிலும் பஸ்களிலும் ரயில் பிடித்தும் வரவைத்து அலைக்கழித்த பின்னர், பலரது அதிருப்தியின் காரணமாக, ‘ரெம்டெசிவிர்’ மருந்து மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்ய திட்டம் போட்டது அரசு. அதன்படி, ஐந்து மையங்களில் ரெம்டெசிவிர் மருந்தை அனுப்பி வைத்தது.

அதே நேரம், ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. அதனை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்தனர். இருப்பினும், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. தனியார் மருத்துவமனை டாக்டர்களின் கட்டாய பரிந்துரையினால், இந்த மருந்துக்கு ஏக கிராக்கி ஏற்பட்டு, பலரும் முட்டிமோதும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த அடிதடி பிரச்னைகளால் நொந்து போனவர்கள், ரெம்டெசிவர் கேட்டு வரும் ஒவ்வொருவருக்கும் அவரவரது ஆதார் எண் மற்றும் நோயாளியின் ஆதார் எண்ணை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் வந்து வாங்கிக் கொள்ளும் படி கம்பியூட்டரைஸ்ட்டு டோக்கன் கொடுத்து நிற்க வைக்காமல் அனுப்பி விடக் கூடாதா.? விஞ்ஞானம் எவ்வளவோ. முன்னேறினாலும் மக்களை மந்தைகளைப் போல நடத்துவது பகுத்தறிவு முன்னேறாமல் இருப்பதையே காட்டுகிறது… என்று விமர்சனம் செய்தனர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
remdesivir
remdesivir

ரெம்டெசிவிர் மருந்து தேவை என்ற காரணம் கூறி, சில மருத்துவமனைகளில் முறைகேடுகளும் பெரிய அளவில் நடக்கத்தான் செய்தன. கள்ளச்சந்தையில் விற்க, நோயாளியின் உறவினர்கள் மூலம் பெற்ற ரெம்டெசிவிர் மருந்தையே, நோயாளிக்கு பயன்படுத்திவிட்டது போல் காட்டி, அதனை குப்பைத் தொட்டியில் போடுவது போல் மறைத்துவைத்து, அதனை எடுத்துச் சென்று கள்ளச் சந்தையில் விற்க முனைந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்தல்ல என மருத்துவர்கள் விளக்கம் அளித்தாலும், அதன் மீதான தேவை மட்டும் குறையவில்லை. அப்படி எனில், ஏன் அதை வாங்கிவரச் சொல்லி எல்லா மருத்துவமனை டாக்டர்களும் மக்களை அலையவிட்டு, கால் கடுக்க காக்க விட்டு கஷ்டப்படுத்தறீங்க என்ற கேள்வி எழாமல் இல்லை. அதே நேரம், ரெம்டெசிவிருக்கு மாற்று மருந்து இருக்கிறது என்று வந்த தகவல்களும் இந்த மருத்துவர்களை வந்ததடைந்ததாகவும் தெரியவில்லை.

நண்பர் ஒருவரின் தந்தைக்கு ரெம்டெசிவர் உடனடியாகப் போட வேண்டும் என டாக்டர்கள் கூற இவரும் கால்கடுக்க ஒன்றரை நாள் நின்று அந்த மருந்தை வாங்கி மருத்துவமனையில் கொடுக்க… அவர்கள் சாவதானமாக அதனை வாங்கி வைத்துக் கொண்டு ‘உங்க அப்பாவுக்கு ரெம்டெசிவர் எங்க கிட்ட இருந்ததை போட்டுட்டோம். நீங்க வாங்கிட்டு வந்ததை வேற பேஷண்ட்டுக்கு யூஸ் பண்ணிக்கறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சரி… அப்படி என்றால், அதை ஏன் முன் கூட்டியே சொல்லவில்லை? இவர் அப்பாவுக்கு உண்மையிலேயே ரெம்டெசிவர் போடப்பட்டதா என்பதற்கு என்ன ஆதாரம்? எதற்கும் பதில் இல்லை!

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

தனியார் மருத்துவமனைகளுக்கு எந்தக் கண்காணிப்போ கட்டுப்பாடுகளோ இல்லை. இது, உயிர்காக்கும் மருந்து இல்லை என்றால் பின் ஏன் இத்தனை பரபரப்பு!?

உலக சுகாதார நிறுவனம் என்ற மருந்து தரகர்கள், ஏதோ ஒரு முறை அதனைப் பரிந்துரைத்தது என்ற ஒரே காரணத்துக்காக திடீர் என அந்த மருந்தை அத்தனை மருத்துவமனைகளும் பரிந்துரைப்பது எந்த விதத்தில் சரி? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தக் கூத்துகள் தமிழ்மாநிலத்தில் மட்டுமல்ல… நாட்டில் பரவலாகவே நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் என பல இடங்களில் கருப்புச் சந்தையில் ரெம்டெசிவிர் போனது இப்படிப்பட்ட முறைகேடுகளால்தான்!

remdesivir antiviral
remdesivir antiviral

ஆனால், மத்திய மாநில அரசுகள் இதனை நல்ல முறையில் கையாண்டிருக்கலாம்தான்! ரெம்டெசிவிர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்யகொரோனா நோயாளி மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டவுடனேயே அவர்களுக்கான சிகிச்சை விவரம் அடங்கிய கோப்பு, மாநில அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு ரெம்டெசிவிர் , ஆக்சிஜன் தேவை என்ன என்பன போன்றவற்றை தெரிந்து கொண்டு, நோயாளிகளின் மொபைல் எண்ணுக்கு ஒ டி பி அனுப்பி உறுதி செய்து அவர் அனுமதிக்கபட்ட மருத்துவ மனைக்குத் தேவையான மருந்து மற்றும் ஆக்சிஜனை அலாட் செய்து அனுப்ப இயலும். இதில், நிச்சயம் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

அப்படியே காலதாமதம் ஏற்படும் என்று இருந்தால், அதனைச் சரிசெய்ய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அந்தப் பகுதியில் உள்ள படுக்கை வசதிக்கு ஏற்ப முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு மருந்துகளை அனுப்பி, அவை பயன்படுத்தப் பட்ட டேட்டாவைக் கொண்டு இரண்டு நாளுக்கு ஒரு முறை அதனை நிரப்புவதற்கான வசதியைச் செய்யலாம். இதற்கான தகவல் தொழில்நுட்பத்தை அரசு முக்கிய நிறுவனங்களிடம் கேட்டுப் பெற்று கையாளலாம்!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

எனவே… Remdesivir மருந்தை நேரடியாக மருத்துவமனைகளுக்கு … நோயாளியின் செல் எண் பெற்று / மெசேஜ் அனுப்பி… தகவலை உறுதிப் படுத்தி… (ஆதெண்டிகேஷன் ஓடிபி.,யுடன்) அனுப்பி வைக்க வேண்டும்

மருந்தை வாங்க வரிசைகட்டி… மூன்று நாள் காத்திருந்து கொண்டு போகும் முன்… நோயாளியை எமன் கொண்டு போய் விடுகிறான் என்று கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள்.. வலியை அனுபவித்தவர்கள்..

ரெம்டெசிவிர்-க்கு மாற்று மருந்து உண்டு என்கிறார்கள். ரெம்டெசிவிர் இந்த வகையான சிகிச்சைக்கு அத்தியாவசியமானதில்லை என்று சில மருத்துவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்…

ரெம்டெசிவிர் வாங்க வரிசை கட்டி நின்று பல பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்…

அரசு சரியான திசையில் செல்ல வேண்டும்… என்றே விரும்புகிறோம். தொழில்நுட்பத்தையும் புத்திசாலித்தனத்தையும் உச்சபட்ச அளவு பயன்படுத்தி, மக்களை வெளியில் வராமல் செய்வதே இப்போது அரசின் முதல் கடமை!

ரேஷன் கடை வரிசை, ரெம்டெசிவிர் வரிசையெல்லாம் கடந்த ஆட்சியில் இல்லை. அப்போதும் இதே அதிகாரிகள் தான் செயல்படுத்தினார்கள். இப்போதும் அதிகாரிகளும் முன்களப் பணியாளர்களும் அவர்களேதான்! அரசு ஆட்சி இருக்கை மட்டுமே மாறியிருக்கிறது என்பது உண்மையானால்… தமிழகம் இத்தகைய இழப்புகளை நிச்சயம் சந்தித்திருக்காது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img